கி.ராஜநாராயணன் பற்றி -ரா.அழகுராஜ்

                     கி.ராஜநாராயணன் பற்றி

                                                         -ரா.அழகுராஜ்



                         கி.ராஜநாராயணன் பற்றி

                                                         -ரா.அழகுராஜ்


     கரிசல் வட்டார இலக்கியத்தின் பிதாமகன், வட்டார இலக்கியத்தின் முன்னத்தி ஏர், கரிசல் குயில் என்றெல்லாம் பலவாறாக போற்றப்படும் கதைசொல்லி கி.ராஜநாராயணன் அவர்களை அவரது கதைகளின் வாயிலாக அணுகி அவர் எவற்றையெல்லாம் பெரும்பாலும் தனது கதைகளில் பேசியுள்ளார் என்பதை வெளிப்படுத்துவதாக இக்கட்டுரை அமைகிறது. நான் வாசித்த கி.ராவின் படைப்புகளில் சிலவற்றை மட்டுமே இக்கட்டுரை தாங்கியுள்ளது. 



கதைசொல்லி கி.ரா:


     கடந்த சில நாட்களுக்கு முன் கி.ரா கதைசொல்லியா என்ற கேள்வி விவாதத்திற்கு உள்ளானது. என்னைப் பொறுத்தவரை கி.ரா ஒரு கதைசொல்லியாகவே அவரது எழுத்தின் மூலமாகவும் பேச்சின் வாயிலாகவும் வெளிப்படுகிறார். அவர் அப்படி ஒரு கதைசொல்லியாக உருவெடுத்ததற்கு அவரது மனைவி கணவதியம்மாளின் பங்களிப்பு மிக முக்கியமானது என்று நான் கருதுகிறேன். ஏனென்றால், ஒருவர் கதை சொன்னால் அதை ஆர்வத்தோடு கேட்பதன் மூலமே அவரிடம் இருந்து பெரும்பாலான கதைகளை பெற முடியும். கதைகளைச் சொல்வது மட்டுமன்றி கதைகள் பற்றிய தனது கருத்தை பலவாறாக கட்டுரைகளிலும் கதைகளிலும் வெளிப்படுத்தியுள்ளார். 


     பிறந்த கதையச் சொல்லவா வளர்ந்த கதையச் சொல்லவானு கேட்டு ரெண்டு கதையையும் சொல்லமாட்டார் கோபல்லகிராமம் புதினத்தில் வரும் அக்கையா என்ற கதாபாத்திரம்.


      கதைலேசு நெஜம் கஷ்டமில்லையா என்ற வரிகள் கரிசல் காட்டு சம்சாரி கதையில் இடம் பெறுகிறது. 



      "கதை சொல்லணுமாக்கும். சரி, சொல்றேன்.


எங்க ஊர்லெ எல்லாம், ஒரு கதை சொல்லுண்ணு கேட்டா.


‘நா வாழ்ந்த கதையைச் சொல்லவா; நா தாழ்த்த கதையைச் சொல்லவா’ண்ணு கேக்கிறதுண்டு, நாம ரெண்டு லெ எதையாவது கேட்டு வைக்கணும். ஆனா, அவங்க வாழ்ந்த கதையும் வராது; தாழ்ந்த கதையும் வராது. ஏதாவது ஒரு கதை வரும்!


பின்னெ என்னத்துக்கு இந்தக் கேள்விண்ணு நினைக்கலாம். ஒருவேளை, கொஞ்சம் யோசிச்சிக்கிட அவகாசம் வேணும்ங்கிறதுக் காக இருக்கலாம். எல்லாம் ஒரு ‘இது’க்காகத்தான்." என்கிற வரிகள் ஒரு வாய்மொழி கதை எனும் கதையில் இடம்பெற்றுள்ளது. 


     தீராத கதைசொல்லியாக வாழ்ந்த கி.ராவின் கதைகளில் எல்லாம் சொலவமும் பழமொழியும் நிறைந்திருப்பது போல தனது கதை பற்றிய கி.ராவின் கருத்தையும் அவரது கதைகள் இவ்வாறு தாக்கியுள்ளது. ஒரே மாதிரியான கருத்தை மூன்று இடங்களில் வெவ்வேறு கோணத்தில் வேறுபட்ட வார்த்தைகளால் கி.ரா கூறியுள்ளார். கதைக்குள் கதை சொல்லும் பாணி வாசகர்களை கதையோடு இணைத்தால் மட்டும் அது எழுதப்பட்டதன் பயனை அடையும். கோபல்லகிராமம் புதினத்தில் மங்காயத்தாரு அம்மாள் மூலம் கி.ராவின் கதைக்குள் கதை சொல்லும் பாணி வெற்றி பெற்றுள்ளது என சொல்லலாம். அதேபோல் கோபல்லபுரத்து மக்கள் புதினத்தில் விடுதலைப் போராட்டம் தொடர்பான காட்சிகள் அதிகம் வருகிறது. அப்படிப்பட்ட தகவல்களை கி.ரா தொகுத்து தரும் போது கதைக்குள் எவ்வித பாதிப்பும் ஏற்படாது இலக்கியத் தன்மைக்கு ஏற்ப கொடுத்திருப்பார்


நாட்டுப்புறவியல் தாக்கம்:

      

       கி.ரா எழுதிய கதைகள் எல்லாம் அவர் வாய்மொழியாக கேட்டதுடனான புனைவு. முதன் முதலில் நாட்டுப்புற பாலியல் கதைகளைத் தொகுக்கும் முயற்சியில் இறங்கிய கி.ராவின் தனிப்பட்ட கதைகளில் கூட அந்த பாலியல் கதைகளின் சாரம் வெளிப்பட்டுள்ளது. நீர்முள்ளு, தேள்விஷம், இருதலைமணியன் முதலான கதைகள் அப்படிப்பட்டவையே ஆகும்.


      பாலியல் கதைகள் மட்டுமல்லாது கிராமங்களில் நம்பப்பட்டு வந்த நாட்டுப்புற கதைகளையும் தனது புதினங்களில் கி.ரா சொல்லியுள்ளார். கோபல்லகிராமம், கோபல்லபுரத்து மக்கள் போன்ற புதினங்களும்கிடை குறுநாவலும் கதைப்போக்குக்கு ஏற்றபடி இணைத்து பல நாட்டுப்புற கதைகளை ஏந்தியுள்ளது. கிடை குறுநாவலை நாட்டுப்புற பாணியிலான ஒரு பெண்ணின் புலம்பல் என்று கூட சொல்லலாம்.


      கதைகள் மட்டுமல்லாது நாட்டுப்புற பாடல்களும் கி‌.ராவின் கதைகளில் இடம்பெற்றுள்ளது. திருநங்கையின் வாழ்வை சித்தரிக்கும் கோமதி சிறுகதையிலும், புறப்பாடு சிறுகதையிலும் நாட்டுப்புறப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. கிடை குறுநாவலுக்கான கதையையே செவனி எனும் பெண் பாட்டாகத் தான் தொடங்குகிறாள். இந்த இவள் குறுநாவலிலும் நாட்டார் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. கோபல்லகிராமம் மற்றும் கோபல்லபுரத்து மக்கள் என்ற இரண்டு புதினங்களிலும் நாட்டுப்புற பாடல்கள் இடம் பெற்றுள்ளன.


      இந்த நாட்டுப்புற கதைகள் மற்றும் பாடல்கள் நகைச்சுவையையும் சடங்குகளையும் கிராமங்களில் நிலவிய பேய் மற்றும் நாட்டார் தெய்வங்களின் கதைகளையும் மட்டும் சொல்லாமல் கிராமத்து மக்களின் வலியையும் உணர்வுகளையும் தாது வருடப் பஞ்சத்தின் போது நடந்த கொடூரமான சூழலையும் ஆங்கிலேய எதிர்ப்பையும் சொல்லும் விதத்தில் கதைகளில் இடம் பெற்றதால் தான் நாட்டுப்புறவியலின் தாக்கம் வரலாற்றோடு கி.ராவின் கதைகளை தொடர்புபடுத்துகிறது.


     கிடை குறுநாவலில் பொன்னுசாமி நாயக்கர் பேய் குறித்த செய்திகளை பரப்பியதும் கோபல்லபுரத்து மக்கள் கதையில் வரும் ஜடாமுனி, அய்யனார் வீதி உலா கதைகளும் கரிசல் காட்டு சம்சாரி கதையில் நாயக்கர் பேய் பார்த்ததாகவும் பாம்பு பார்த்ததாகவும் ஏமாற்றியது முதலானவை நெடுநாட்களாக இருக்கும் நாட்டுப்புறவியல் கூறுகள் கொண்ட கதைகளிலும் சடங்குகளிலும் முக்கியத்துவமானதாகும். 


      பஞ்சத்தைப் பற்றி கேள்விப்பட்டால் மட்டும் தெரியாது. அதை அனுபவித்தவர்களுக்குத் தான் அதன் கொடூரம் தெரியும் என இந்த இவள் குறுநாவலில் ஒரு வரி வருகிறது. அதுபோல கி‌.ராவைப் பற்றிக் கேள்விப்பட்டால் மட்டும் தெரியாது. அவரது கதைகளை வாசித்தவர்களுக்குத் தான் அந்த கதைகளின் அருமை தெரியும்.


சூழலியல் நோக்கில் கி.ரா கதைகள்:


     ஒரு மனிதன் படைப்பாளியாக மாறுவதற்கு தனது சூழலை உற்று நோக்குவது அவசியமான ஒன்றென நான் கருதுகிறேன். அந்த வகையில் கி.ரா தனது சூழலை நன்கு உற்றுநோக்கி கரிசல் வட்டார பகுதிகளில் வாழ்ந்த மக்களைப் பற்றி மட்டும் கதைகள் சொல்லாமல் அங்கு வாழ்ந்த மரங்கள், பழங்கள், ஊரும் பிராணிகள், பறவைகள், விலங்குகள் முதலானவற்றையும் கதைகளில் சொல்லியுள்ளார். 


      பனைமரம் என்பது தமிழகத்தின் பண்பாட்டு சின்னமாக இன்றளவும் திகழ்கிறது. பனையின் பயன்களை சில தற்கால படைப்புகள் தாங்கி நின்றாலும் கி.ராவின் புதினங்களும் சிறுகதைகளும் பனையைப் பற்றிய பல தகவல்களை நமக்கு பகிர்கிறது. கோபல்லகிராமத்தில் வரும் நாயக்கர் விடலைப் பனையில் பல பொருட்களை செய்து அசத்துகிறார். பனைநார்ப்பெட்டி, பனைநார்க்கட்டில், பனைஓலைப் பயன்பாடு, பனைவிளக்குகள், பனம்பழம், கருப்பட்டி, பனங்கள்ளு முதலானவை கோபல்லகிராமம், கோபல்லபுரத்து மக்கள் என்ற இரண்டு புதினங்களிலும் பேதை, நிலைநிறுத்தல் முதலான சிறுகதைகளிலும் முக்கியமான இடத்தைப் பெறுகிறது. 


     உடங்காடு எனும் சொல் கி.ராவின் பல கதைகளில் எதிரொளிக்கும். அந்த உடன்காடு உடை மரம் சூழ்ந்ததாகும். கருவை மரம், வேப்பமரம், அரசமரம், மஞ்சனத்தி மரம் முதலானவை கி.ராவின் கதைகளில் இடம்பெறுவது மட்டுமல்லாது அந்தந்த மரத்தின் தன்மைக்கேற்ற கதைப் போக்கில் கி.ரா ஒவ்வொரு மரத்தையும் பொருந்தியிருப்பது கவனிக்கக் கூடிய ஒன்று. அதேபோல் பனம்பழம், கோவைப்பழம், கள்ளிப்பழம், நெய்த்தக்காளி முதலியனவும் கதைகளில் இடம்பெற்றுள்ளது.


     கூகை, ஆந்தை, வௌவால், கதுவாலி, கீரி, முயல், முள்ளம்பன்றி, கேடா, நட்டுவக்காலி, பெருச்சாளி, மரநாய், உடும்பு, பாம்பு, பூனை, முள்ளெலி, குரவைமீன், நாரை, காடை, கரிச்சான், ஆள்காட்டி குருவி, வான்கோழி, நீர்க்கோழி, ஆடுகள், மாடுகள் முதலானவை கி‌.ராவின் கதைகளில் இடம் பெறுகிறது. 


     குறிப்பாக கிடை குறுநாவல் ஆடுகளின் தன்மைகளை பலவாறாக பிரித்துத் தருகிறது. விவிலியத்தில் யாக்கோபு ஆடு மேய்க்கும் போது அது ஈனும்போது யாக்கோபு விரும்பிய வண்ணத்தில் குட்டிப் போட பல உத்திகளை பயன்படுத்தியதை வாசித்துள்ளேன். அதற்குப் பின் அப்படிப்பட்ட ஆடுகள் ஒவ்வொன்றிற்குமான பெயர்கள் என்ன என்மதைச் சொல்வதாக கிடை உள்ளது. கோபல்ல கிராமத்திற்கு கோபல்லம் என பெயர் வருவதற்கு காரணமே பசுக்கள் தான் என்கிற செய்தி கோபல்ல கிராமத்திலேயே உள்ளது. கரிசல் காட்டு சம்சாரியில் விவசாயத்திற்கு காளை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது எனப் பேசப்படுகிறது. புறப்பாடு சிறுகதையில் மாட்டுப்பால், எருமைப்பால், ஆட்டுப்பால் என சாகக் கிடக்கும் மனிதனுக்கு எந்தப் பாலை ஊற்றி மேலே அனுப்புவது என்கிற விவாதமே இடம்பெற்றிருக்கும். இவ்வாறு கரிசல் பகுதி மக்களை மட்டுமல்லாமல் அங்கு வாழ்ந்த உயிர்களையும் கி.ரா பதிவு செய்துள்ளார். கோபல்லம் கிராமமாக மாற காட்டை எரித்த போது காட்டில் உள்ள பல உயிர்கள் மன்றாட்டோடு வெளிப்படும். நிலைநிறுத்தல் சிறுகதையில் மழை வருவதை பறவையும் விலங்குகளும் உள்ளுணர்வால் அறிவதை அவைகளிடம் இருந்து பெற்று கி.ரா கடத்தியிருப்பார். 


     மலம் கழிப்பது குறித்த கிராமத்து மக்களின் புரிதல் கண்ணாடியாக சுற்றுப்புறம் சுகாதாரம் சிறுகதையிலும் கோபல்ல கிராமம் புதினத்திலும் வெளிப்படுகிறது. இதுவும் சூழலியல் பார்வையில் அணுக வேண்டிய ஒரு முக்கியமான கருதுகோள் ஆகும்.


கரிசல் வட்டார பழக்கவழக்கங்கள்:


அணிகலன்களும் ஒப்பனையும்


      பாம்படம், தொறட்டி முதலான அணிகலன்கள் தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் இடம்பெற்றாலும் அவற்றை முதன்மைப்படுத்தி கதைகளில் கொண்டுவந்தவர் கி.ரா. காதுவளர்த்ததையும் பாம்படம் அணிந்திருப்பதையும் நான் சிறுவயதில் அதிகமாக பார்த்துள்ளேன். இப்போதும் அங்காங்கே ஓரிருவர் மட்டுமே பாம்படத்தைத் தொங்கப் போட்டிருப்பதையும் தொறட்டி குத்திருப்பதையும் பார்க்க முடிகிறது. கம்மவார் என்ற சொல்லே அவர்கள் அணிந்திருந்த கம்மலில் இருந்து வந்ததாக கி.ரா குறிப்பிட்டுள்ளார்.


     இன்று காதல் தோல்வியில் தாடி வளர்ப்பது என்பது அன்று திருமணம் ஆகாதவர்கள் எல்லாம் சவரம் செய்யாமல் இருந்ததன் தொடர்ச்சி ஆகும். 



உணவு:


     கரிசல் வட்டார உணவுகளில் கருப்பட்டி முக்கியத்துவம் பெற்றதையும் கூழ், கஞ்சி முதலானவை முக்கிய இடம் வகித்ததையும் கி.ராவின் கதைகளில் பார்க்க முடிகிறது. இந்த இவள் குறுநாவலில் உண்டு கெட்ட சாதி என்கிற பழமொழியும் பலவகை இனிப்புகளை உண்ணும் குடும்பத்தையும் இனிப்பு, கசப்பு என உணவின் சுவை உணர்வில் ஏற்படுத்தும் மாற்றமும் பதிவாகி உள்ளது. பஞ்ச காலங்களில் கிழங்குகளை அகன்றெடுத்து உண்பதை நிலைநிறுத்தல் சிறுகதையில் கி.ரா சொல்லியிருக்கிறார்.


      வெற்றிலை போடுவது மூக்குப்பொடி போடுவது முதலானவற்றை ரசனையோடு கோபல்லகிராமம் புதினத்திலும் ஒருவாய்மொழிக்கதை கதையிலும் கி.ரா வெளிப்படுத்தி இருக்கிறார்.


கரிசல் நில வேளாண்மை:


      ஒவ்வொரு மண்ணும் ஒவ்வொரு விதமான பயிர்கள் விளைவதற்கு தகுதியானதாக இருக்கும். அந்த வகையில் கரிசல் மண் என்பது வானம் பார்த்த பூமி பஞ்சத்தை எளிதில் சந்திக்கும் வறண்ட பகுதியாக காட்சியளிக்கக்கூடிய ஒன்று. இங்கு பணப்பயிர்கள் விளைவதற்கான சூழல் என்பது சாத்தியமற்ற ஒன்றாகவே உள்ளது. பருத்தி, உளுந்து, கம்பு முதலான பயிர்களை விளைவிப்பது குறித்த பகுதி கரிசல் கதைகளில் அதிகம் இடம்பெறுகிறது. 


     கரிசல் மண்ணில் கலப்பை போடும் தகவல்கள் பல கதைகளில் இடம்பெற்றுள்ளது. கோபல்லகிராமம் புதினத்தில் அக்கையா கலப்பை போடுவதில் புதுமுறைகளை கரிசல் மண்ணுக்கு ஏற்றவாறு கையாள்வார். அதே முறையை கரிசல் காட்டு சம்சாரி சிறுகதையிலும் அதே முறையில் கலப்பை பயன்பாடு இடம்பெற்றிருக்கும். இவ்வாறு இரட்டை கலப்பை பயன்பாடு அதைப் பயன்படுத்தும் விதம் கதைக்கோர்வையோடு சொல்லப்பட்டு இருக்கும். இந்த மாதிரியான தகவல்களைச் சொல்லும் போது கதையின் கோர்வையில் பிளவு ஏற்படுவதுண்டு. ஆனால் கி.ரா கதைக் கோர்வையில் சிக்கல் இல்லாமல் தகவல்களை புகுத்தியிருப்பார். விடிவு கதையில் ஏரெழுபது நூலில் கம்பர் சொல்லியதையெல்லாம் பற்றிய ஒரு கரிசல் காட்டு விவசாயியின் நிலை சொல்லப்பட்டு இருக்கும். மின்சாரத்தின் வருகை விவசாயத்தில் ஏற்படுத்திய மாறுதல்களையும் கி.ராவின் கதைகள் சொல்கிறது.


     கரிசல் நில விவசாயத்தை படம் பிடித்து காட்டுவதற்கு கரிசல் காட்டு சம்சாரி என்ற ஒரு கதை போதும். ஒரு நிலம் அழிவைச் சந்தித்தால் அந்த நிலத்தின் சம்சாரி என்ன ஆவான் என்பதை கிடை குறுநாவலின் மூலம் ஓரளவு அறிய முடியும். மழை வராத காலத்தில் கரிசல் நிலத்தின் வறட்சி எப்படிப்பட்டது என்பதையும் தண்ணீரின் தேவையையும் நிலைநிறுத்தல் இந்த இவள், மாயமான், விடிவு முதலான படைப்புகளில் வெளிப்பட்டுள்ளது.


‌சாதிய பாகுபாடும் சுரண்டலுக்கெதிரான குரலும்:


      கி.ரா தனது கதைகளில் தனது சாதியை மட்டுமே முதன்மை படுத்திய சாதிய எழுத்தாளர், தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வை கி.ரா பேசவில்லை என்றும் அவர்மீது விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. ஆனால், இதுவரை புதினங்கள் பேசத் தவறிய கம்மாளர்களை கோபல்லகிராமம் புதினத்திலும் நாற்காலி சிறுகதையிலும் கி.ரா பேசியுள்ளார். கம்மாளப்பெண்ணை முக்கிய கதாபாத்திரமாகக் கொண்டதாக கோபல்ல கிராமம் உள்ளது. அதேபோல், பொன்வேலை செய்யும் ஆசாரிகள், மரவேலை செய்யும் ஆசாரிகள் கி.ராவின் கதைகளில் வந்து போகின்றனர். பாம்படம், கலப்பை, கழு மரம், நாற்காலி என ஆசாரியர்களைப் பேசிய கி.ரா கோபல்ல கிராமத்தில் நாயக்கர் வர்ணம் என்ன என்று பூணூலைப் பார்த்து கேட்டதில் சாதியம் முக்கியத்துவம் பெற்றிருந்ததை உறுதிப்படுத்துகிறார்.


     கரிசல் காட்டு சம்சாரி சிறுகதையில் வரக்கூடிய நாயக்கர் தொடக்கூடிய சாதியாக இருந்தால் தொட்டுப் பேசுவார் என்கிற வாக்கியம் இடம்பெற்றுள்ளது. கோபல்லகிராமம் புதினத்தில் பஞ்சாயத்தில் இருக்கும் ஒரு நாயக்கர் சிறந்த வைத்தியர் எனச் சொல்லும்போது தீண்டத்தகாத சாதிக்கு வைத்தியம் பார்க்க நாடிப் பிடிக்கும்போது ஒரு பட்டுத்துணியைக் கையில் போட்டு தொடாமல் நாடிப்பார்ப்பதாக எழுதப்பட்டிருக்கும். இந்த இரண்டும் தீண்டாமை வலுப்பெற்று நின்றதை சொல்லும் சான்றுகளே ஆகும். கிடை குறுநாவலே செவனி என்ற தாழ்த்தப்பட்ட பெண்ணின் குரலாகவே ஒலிக்கிறது. மாயமான் சிறுகதையில் செட்டியாருக்கும் நாயக்கருக்கும் இடையிலான வித்தியாசத்தை வெளிப்படுத்தி இருப்பார். கோபல்லபுரத்து மக்கள் புதினத்தில் நாயக்கர், தேவர், ஆசாரி போன்றோரோடு பகடை என தாழ்த்தப்பட்ட சாதியினர் பற்றி பேசும் இடங்களை இரண்டு கோணங்களில் பார்க்கலாம். பகடை பட்டாளம், மதுரைவீரன் (மாதரியான் பட்டாளம்) முதலானவை ஒன்று. மற்றொன்று தாழ்த்தப்பட்டவர்களாகவே அவர்களை அழைத்து அவர்களது சாதிய சடங்குகளை கேட்பது ஆகும். இவ்வாறு சாதியம் சார்ந்த பதிவுகளை கி.ரா தனது படைப்புகளில் பதிவு செய்துள்ளார்.


      மாயமான், விடிவு மற்றும் நிலை நிறுத்தல் சிறுகதைகளில் சுரண்டலுக்கு எதிரான குரலையும் அரசு கிராமத்திற்கும் நகரத்திற்கும் இடையில் காட்டும் வித்தியாசத்தையும் கி.ரா பதிவு செய்துள்ளார். அவரது கதைகளில் இலக்கியம் மோலோங்கி நின்றதாலும் எள்ளல்பட கி‌.ரா கதையைச் சொல்லியதாலும் இந்த சுரண்டலுக்கு எதிரான குரல் மட்டுப்பட்டு இருக்கிறது. வேட்டி சிறுகதையில் ஒரு தலைமறைவான அரசியல்வாதி வருவார். இதெல்லாம் அவருடைய பொதுவுடைமை சார்பை வெளிப்படுத்துவதை நம்மால் பார்க்க முடியும். கோபல்லபுரத்து மக்கள் புதினத்தில் பகத்சிங்கின் தூக்கு பற்றிய பகுதியிலும் கூட கி.ராவின் கொள்கை வெளிப்படுவதைப் பார்க்கலாம். காந்தி ஆதரவு மேலோங்கி இருந்த காலத்தில் போஸ் மீதான மதிப்பு கிராமத்தில் எந்தளவு வீறுகொண்டிருந்தது என்பதையும் கி.ரா சொல்லியிருப்பார் இவையெல்லாம் அவரது கொள்கைகளின் சாரம் ஆகும்.


பஞ்சாயத்து முறைகள்:


      கிராமங்களில் பஞ்சாயத்து நடைபெறும் தகவல்களும் கோபல்ல கிராமம், கோபல்லபுரத்து மக்கள், கிடை முதலான படைப்புகளில் வெளிப்படுகிறது. 


     பாளையப்பட்டு ஆட்சிக்கும் கும்பினி ஆட்சிக்கும் இடைப்பட்ட (பாளையக்காரர்களுக்கும் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சிக்கும் இடைப்பட்ட) காலத்தைச் சார்ந்தது கோபல்ல கிராமம் புதினம். அதில் ஒரு மனிதனை கழுவில் ஏற்றிக் கொள்ளும் அதிகாரம் கிராமத்துப் பெரியவர்களுக்கே இருந்துள்ளது. ஆனால், பெரிய கொள்ளைக்காரனான மல்லையாவும் கழு ஏற்றப்பட்ட கள்ளனுக்கும் நோக்கம் ஒன்றுதான் அவர்கள் இருவரும் இருந்த நிலை தான் வேறு. தனிநபர் அதிகாரத்தின் கீழ் விசாரிக்கும் வழக்கு, ஊர் கூடி விசாரிக்கும் வழக்கு என இரண்டு வகை வழக்குகளையும் அதற்கான வரம்புகளையும் கி.ரா பட்டியலிட்டு உள்ளார்.


     கோபல்லபுரத்து மக்கள் புதினத்தில் பகடை மக்களின் பஞ்சாயத்து முறைகளைப் பேசும் போது வாதி பிரதிவாதி இருவரும் கள்ளை பஞ்சாயத்தினருக்கு ஓரவஞ்சனை இல்லாமல் முழுப்போதை அடைய கொடுத்து பஞ்சாயத்தை விசாரிப்பதும் அவ்வாறு போதையில் இருக்கும் போது உண்மையை மட்டுமே பேசுவதாகவும் கி.ரா குறிப்பிட்டுள்ளார். அதேபோல், ஓட்டப்பிடாரம் தாலுகா கோவில்பட்டி தாலுகாவாக மாறிய பின்னணி, சம்பந்தி விருந்து என பல இடங்களில் சாதியம் குறித்த பதிவுகள் கோபல்லபுரத்து மக்கள் புதினத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.


     கிடை நாவலில் நாயக்கர் எல்லப்பனை தப்பிக்க வைக்க பொன்னுச்சாமி நாயக்கரை சூதகமாக கோர்த்துவிடுகிறார். இப்படி பஞ்சாயத்தில் உள்ளவர்களும் வேண்டியவர் வேண்டாதவர் எனப் பார்ப்பதும் சாதியத்திற்கு இழுக்கு வராமல் இருக்க உண்மையை மறைப்பதுமான பஞ்சாயத்து முறைகளை சூசகமாக கி.ரா சொல்லியுள்ளார்.


புதியன புகுதல்:


     கி.ராவின் கதைகளில் ஆங்கிலேயர்களின் வருகையால் தமிழகத்தற்கு கிடைத்த தொடர்வண்டி, கார், டார்ச்லைட், கரண்ட், போன், தந்தி முதலானவை கிராமத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை கோபல்லபுரத்து மக்கள் புதினத்திலும் வேட்டி சிறுகதையிலும் பேசியிருப்பார். 


     கோபல்லபுரத்து மக்கள் புதினத்தில் இரயிலின் அதிர்வில் அதிர்ச்சி அடைந்த ஆடுகளையும் டார்ச்லைட் மூலம் காணாமல் போன பேய் கதைகளையும் பற்றி வியப்பாக சொல்லியிருப்பார். வேட்டி சிறுகதையில் கார் பேருந்து முதலானவற்றின் வருகை பேசப்பட்டு இருக்கும். விடிவு சிறுகதையில் மின்சாரப் பயன்பாடு குறித்த கிராமத்து விவசாயியின் கருத்துக்கள் வெளிப்பட்டு இருக்கும். நாற்காலி கதையும் கூட மக்கள் நாற்காலியை ஆச்சரியத்தோடு பார்ப்பதாகவே வெளிப்பட்டு இருக்கும். 


எத்தனை மாதிரியான அதிசயப்பூக்கள், வாசனைகள், மனிதர்களின் ஜாடை கூட மண்ணுக்கு மண் வித்தியாசப்படும் போலிருக்கிறது என்று கோபல்ல கிராமம் புதினத்தில் கி.ரா எழுதியிருக்கும் வரியை கரிசல் பகுதிகளுக்கும் பிற பகுதிகளுக்கும் தனித்தனியே பொருத்திப் பார்க்கலாம்.


ஒப்பீட்டு பார்வையில் கி.ராவின் படைப்புகள்:


     கி.ராவின் படைப்புகளுக்குள்ளும்,ஏனைய எழுத்தாளர்களின் படைப்புகளோடும், கதை அமைப்பையும் கதாபாத்திரங்களையும் ஒப்பிடுவதோடு திரைப்படங்களோடும் கி.ராவின் படைப்புகளை ஒப்பிட்டு அதை இந்தப் பகுதியில் அறிய தருகிறேன்.  


     கதவு சிறுகதையில் வரும் கதவும் கோபல்ல கிராமம் புதினத்தில் வரும் கோட்டைச்சுவரும் ஒரே நிலையில் தான் படைக்கப்பட்டுள்ளது பொருள் மட்டும் தான் வேறு அவை இரண்டும் கம்பீரமாக நின்று நொடித்துப் போனவை. கதவு சிறுகதையில் குழந்தைகள் கதவை கட்டிப் பிடிப்பதில் இருக்கும் உணர்வும் மாயமான் சிறுகதையில் நிலத்தை விட்டு செட்டியார் பிரிவதும் படையப்பா படத்தின் இறுதியில் சிவாஜி தூணைக் கட்டிப்பிடிப்பதும் ஒரே உணர்வு தான். நாம் இருக்கும் இடத்தில் நிலைத்து நின்ற ஒரு பொருளை விட்டுப் பிரியும் போது எந்த நிலையில் உணர்வு வெளிப்படுமோ அது தான் கி.ராவின் சிறுகதையில் வெளிப்பட்டுள்ளது. தொண்ணூறுகளின் இறுதியில் பிறந்தவர்கள் கதவில் ஸ்டிக்கர் ஓட்டுவதில் காட்டும் ஆர்வத்தையும் அதில் அடையும் மகிழ்ச்சியையும் 1958ல் எழுதிய கி.ரா உண்மையிலேயே முன்னத்தி ஏர் தான்.


     கோபல்ல கிராமம் புதினத்தில் கொள்ளைக்காரர்கள் வரும் போது பணத்தை எப்படி மண்ணுக்குள் புதைத்து வைப்பார்களோ அதைப்போல கரிசல் காட்டு சம்சாரி சிறுகதையில் பணத்தை மண்ணுக்குள் புதைத்து வைப்பதை பார்க்க முடிகிறது.


     வயதானவர்களை கதாபாத்திரங்களாக கி.ரா படைத்துள்ளார். கோபல்லகிராமம் புதினத்தில் வரும் மங்காயத்தாரு அம்மாள் மட்டும்தான் மதிப்பிற்கு உரியவளாக இருந்துள்ளாள்‌. அவளை புறப்பாடு கதையில் வரும் அண்ணாரப்ப கவுண்டரோடு ஒப்பிடலாம். பல வயதான கதாபாத்திரங்களை கி.ராவின் கதைகள் கொண்டிருந்தாலும் நூற்றுக்கும் மேற்பட்ட வயதுள்ள கதாபாத்திரங்கள் இவை இரண்டு மட்டும் தான். அதேபோல் காய்ச்ச மரம் சிறுகதையில் வரும் முதியோரையும் உண்மை சிறுகதையில் வரும் முதியோரையும் ஓப்புமைப்படுத்தலாம்.


கோபல்ல கிராமம் புதினத்தில் கள்ளனை கழு ஏற்றிய பின் அவன் தண்ணீருக்கு இறைஞ்சும் காட்சி இயேசு சிலுவையில் தண்ணீர் கேட்பதை ஒத்துள்ளது. கதை அடிப்படையில் மட்டுமே இந்த காட்சி ஒப்புமைப்படுத்தப்படுகிறது.


     கோபல்லபுரத்து மக்கள் புதினத்தில் வரும் கார்‌ வண்டிகளை எல்லாம் வேட்டி சிறுகதையில் வரும் வாகனங்களோடு சேர்த்து வைத்து பார்க்கலாம். இரண்டு இடங்களிலும் இப்படிப்பட்ட வாகனங்களின் வருகையை ஒரே மாதிரியாக கி.ரா வெளிப்படுத்தி இருக்கிறார்.


     சுதந்திர தின காட்சிகள் மாயமான் சிறுகதையிலும் கோபல்லபுரத்து மக்கள் புதினத்திலும் ஒரே மாதிரியாகவே மக்களால் பார்க்கப்படுகிறது.


     பஞ்சம் பற்றிய செய்திகள் இந்த இவள் மற்றும் கிடை குறுநாவல்களிலும் நிலைநிறுத்தல் முதலான சிறுகதைகளிலும் வெவ்வேறு தன்மை கொண்டதாக வெளிப்பட்டுள்ளது.அதிலும் வெட்டுக்கிளி இலையை அழிக்கும் செய்தி இந்த இவள் குறுநாவலில் உள்ளது. விவிலியத்தில் வறட்சியின் தொடக்கமாகவும் பஞ்சத்தின் வெளிப்பாடாகவும் வெட்டுக்கிளி பார்க்கப்படுகிறது. காப்பான் திரைப்படமும் கூட இதனை தாக்கியுள்ளது.


     ஒருவாய்மொழிக்கதை‌ சிறுகதையில் மூக்குப்பொடி போடுவதும் கோபல்லகிராமம் புதினத்தில் வெற்றிலைப் போடுவதும் ஒரே வித ரசனையில் சொல்லப்பட்டிருக்கும்


     கோமதி சிறுகதையிலும் வேட்டி சிறுகதையிலும் வேட்டி பற்றிய பார்வை ஒரே மாதிரியாக இருவேறு கோணங்களில் பார்க்கப்படுகிறது.


     பொம்மைகளும் கிளர்ந்தெழும் சிறுகதையில் வரும் விதவையும் கன்னிமை சிறுகதையில் வரும் நாச்சியாரம்மா கதாபாத்திரமும் இந்த இவள் குறுநாவலில் வரும் கதாபாத்திரத்தோடு தொடர்புடைய சாயலை கதையின் பல பகுதிகளில் வெளிப்படுத்துவதைப் பார்க்கலாம்.


     கோபல்லகிராமம் புதினத்தில் சென்னாதேவிக்கு நகை செய்ய விரும்பும் காட்சியில் பிரகாசமான கெம்பு கற்கள் காட்டப்படும். அதேபோல் எழுத்தாளர் லட்சுமி சரவணகுமார் எழுதிய ரூஹ் நாவலில் பிரகாசமான மரகதக் கல் காட்டப்படும். இரண்டு புதினங்களில் வரும் பிரகாசமான கற்களின் பின்னணி பரம்பரையாக குடும்பத்தில் இருக்கும் சொத்து என்பது தான் மேலும் இரண்டு புதினங்களிலும் இசுலாமியர்கள் தொடர்பு உண்டு.


     பேதை சிறுகதையில் வரும் பைத்தியக்கார பெண்ணை எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் புதினத்தில் வரும் பேபி என்கிற பெண்ணோடு பொருத்தலாம். இரண்டு கதாபாத்திரங்களும் நிர்வாணமாகவே சித்தரிக்கப்பட்டுள்ளன.


     கோபல்லகிராமம் புதினத்தில் வரும் அக்கையா என்ற கதாபாத்திரம் எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி எழுதிய செந்தட்டிகாளை கதைகளின் நாயகனான செந்தட்டிக்காளைக்கு ஒப்புமை படுத்தலாம். இரண்டு கதாபாத்திரங்களும் நகைச்சுவையை வெளிப்படுத்தும் பாங்கு ஒரே மாதிரியானதாகும்.


     கோபல்லகிராமம் புதினத்தில் கம்மாளப்பெண்ணை கள்ளன் குளத்தில் அமுக்கும் போது அவள் அவன் கால் பெருவிரலைக் கடிப்பாள். இந்த புதினம் எழுதப்பட்ட ஆண்டு 1976 ஆகும். 1985ல் வெளிவந்த முதல் மரியாதை திரைப்படத்தில் சிவாஜியின் மருமகன் கட்டைவிரலை ஒரு பெண் கடித்திருப்பாள் இதனை ஒப்புமைப்படுத்தி பார்க்கலாம்.


     வேட்டி சிறுகதையில் வரும் தலைமறைவான அரசியல்வாதி போன்றே ஒரு அரசியல்வாதி சங்கத்தமிழன் படத்தில் காட்டப்படுவார்.


     தமிள் படிச்ச அளகு சிறுகதையை கற்றது தமிழ் திரைப்படத்தோடு பொறுத்திப் பார்க்கலாம்.

     

     சுற்றுப்புறம் சுகாதாரம் சிறுகதையில் காட்டப்படும் கக்கூஸ் பற்றிய சிந்தனையை ஜோக்கர் படத்தோடு ஒப்பிடலாம். இரண்டும் கதையின் மையக்கருவில் ஒத்துப்போனாலும் கதை பயணிக்கும் பாதையில் வேறுபடுகிறது.


     புத்தக உலகம் சிறுகதையில் வரும் புத்தகப்பிரியரின் மனநிலையும் அசுர குரு திரைப்படத்தில் வரும் விக்ரம் பிரபு மனநிலையும் ஒரே போன்றது தான்.


      மரணம் பற்றிய கருத்துக்கள் புறப்பாடு சிறுகதையிலும் கோபல்லகிராமம் புதினத்திலும் இடம்பெற்றிருக்கும். இரண்டு படைப்புகளிலும் மரணித்தால் அழக்கூடாது அழுதால் எந்தநேரத்தில் எப்படிப்பட்டவர்களுக்காக அழ வேண்டும் என்கிற கருத்தையே கி.ரா வலியுறுத்தி இருப்பார்

     இவ்வாறு கி.ராவின் கதைகளை கதாபாத்திரங்களை நம்மால் பல இடங்களில் ஒப்புமைப்படுத்தி பார்க்க முடிகிறது. சில இடங்களில் கி.ரா முக்கியத்துவம் கருதி ஒரே கருத்தை இரண்டு படைப்புகளில் வெளிப்பட்டுள்ளார். 


     இந்த கட்டுரை கி.ரா குறித்த புரிதலை அதிகப்படுத்தும் என நம்புகிறேன். இந்த கட்டுரையைப் படித்தபின் இந்த கட்டுரையில் உள்ள செய்திகள் உண்மைதானா என்பதை அறிய நீங்கள் அவரது படைப்புகளை வாசித்தால் மட்டுமே இந்த கட்டுரை எழுதப்பட்டதன் பயனை அடையும்.    


(இந்த கட்டுரையை பேச்சு வடிவில் காண விரும்பினால், 

முதல் காணொளியில் நேரம் 01.35.25 முதல் 02.01.27 வரையும்

இரண்டாம் காணொளியில் நேரம் 03.03.17 முதல் 03.18.01வரையும் காணலாம் 

இந்த கட்டுரையின் முழு உரை பதிவு செய்யப்படவில்லை. சுருக்கமான உரைத் தொகுப்பாகவே இரண்டு காணொளிகளும் உள்ளது.)





(காணொளி வடிவில் பதிவு செய்யப்படாத கி.ரா நினைவேந்தல் நிகழ்ச்சியின் அழைப்பிதழ்)

கி‌‌.ரா குறித்து படைப்பு தகவு மின்னிதழில் வெளியான கட்டுரைகள்:

https://padaippu.com/thagavu/56

https://padaippu.com/thagavu/58


இராஜபாளையம் இராஜூக்கள் கல்லூரி நடத்திய தமிழ் ஆளுமைகளும் படைப்புகளும் என்ற கருத்தரங்கிலும் கி.ராஜநாராயணன் என்ற தலைப்பில் கட்டுரை வாசிக்கப்பட்டுள்ளது.



கருத்துகள்

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. சிறப்பு மென்மேலும் லளர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. நல்லதோர் கட்டுரை தம்பி.சூழலியலுக்கும்,வேளாண்மைக்கும் தனித்தனி தலைப்புகள் இட்டுள்ளீர்.வேளாண்மை கூட சூழலியல் சார்ந்தது தானே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.. வேளாண்மை சூழலியல் சார்ந்தது தான்க்கா.. ஆனால், மரங்கள், பறவைகள், விலங்குகள் முதலானவற்றை வேளாண்மையில் இருந்து தனித்து முதன்மை படுத்தவும் வேளாண்மை சார்ந்த தகவல்களை தனித்து வெளிப்படுத்தவும் இரண்டும் பிரித்து கையாளப்பட்டுள்ளது க்கா

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அசல் அரங்கப் பிரதி - அழகுராஜ் ராமமூர்த்தி

"கவிப்பேரரசர்களின் கவியமுதம்" நூலறிமுகம் - அழகுராஜ் ராமமூர்த்தி