தனியறையில் நிகழும் சாவு -அழகுராஜ் ராமமூர்த்தி


தனியறையில் நிகழும் சாவு -அழகுராஜ் ராமமூர்த்தி  

ஈராக்கின் கிறிஸ்து (உலகச் சிறுகதைகள்)

 தொகுப்பும் மொழியாக்கமும் -கார்த்திகைப் பாண்டியன்



      12 சிறுகதைகளைக் கொண்ட ஈராக்கின் கிறிஸ்து என்ற இந்தத் தொகுப்பு உயிர்மை இதழில் 2021 நவம்பர் முதல்‌ 2022 நவம்பர் வரை வெளியான மொழிபெயர்ப்பு கதைகளின் தொகுப்பு. இந்நூலுக்கு சிறப்பான முன்னுரையொன்றை கொள்ளு நதீம் அளித்துள்ளார். இப்பதிவில் ஒவ்வொரு கதை குறித்த கருத்துகளையும் தனித்தனியே பார்க்கலாம்.

    அலி-எல்-மாக் என்ற சூடான்‌ எழுத்தாளர் எழுதிய “நாற்பத்தியோரு ஸ்தூபிகள்” என்ற கதையில் தனது அம்மாவை ஆங்கிலேய மருத்துவமனையில் ஒருவன் சேர்த்திருக்கிறான். அவள் அங்கு மரணமடைகிறாள். இதுதான் கதை. கதையில் அந்த ஊரில் பயன்படுத்தப்படும் (பியாஸ்டர்) பணம், காப்டிக் எனும் வட ஆப்பிரிக்க கிறிஸ்தவப் பிரிவு, மாதி எனப்படும் அரேபியா பாடல் ஆகியன சுட்டப்படுகின்றன. மசூதிக்கு பெரிய மசூதி என்ற பெயர் வர அதற்குள் இருக்கும் ஸ்தூபி தான் காரணம் என்கிற செய்தி இடம்பெறுகிறது. எப்படி தமிழ்நாட்டில் பெரிய கோயில் என்ற அடையாளம் இருக்கிறதோ அதைப்போன்ற அடையாளமாக இதனைக் காணலாம். அரேபிய நாடுகளில் மசூதிகள் பெறும் முக்கியத்துவத்தை ஒரு நகரில் 51 மசூதிகள் இருப்பதாக சொல்லப்படும் செய்தியை வைத்து அறிய முடிகிறது. 

      வெளிநாட்டில் இருப்பவர்கள் வசம் மருத்துவமனை இருக்கும்போது போதுமான அளவு வசதியும் தூய்மையுடனும் இருப்பதாகவும் உள்ளூர் ஆட்கள் கண்காணிப்பில் பாழாய்போவதுமான செய்தியையும் இக்கதையில் காணமுடிகிறது. ஊருக்கு ஆறுதல் கூறுவோர் தனக்கு இழப்பு ஏற்படும் போது எத்தகைய நிலையை அடைவார் என்பதோடு அந்த மருத்துவமனையில் வெளிநாட்டு பெண் வேலை செய்கிற செய்தியும் சேர்ந்து வந்துள்ளது. திரைப்படம் பார்க்கக்கூடாது என்ற அறிவுறுத்தல், வீட்டுப்பாடம் செய்யாததைக் கண்டிக்கும் தாய் என்பதன் மூலம் அந்நாட்டில் குழந்தை வளர்ப்பு முறை, மதத்தைப் பின்பற்றுதல் போன்றவை இக்கதையினுள் வெளிப்பட காணலாம். 

   முகமது அல் ஷாரிக் என்ற குவைத் எழுத்தாளர் எழுதிய “விசாரணை” என்ற கதையில் ஒரு கோப்பை தேனீர் அருந்த விரும்புவீர்களா? என்று கேட்பதாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதனை இன்னும் எளிமையாக என்னுடன் நீங்கள் ஒரு தேந்ர் அருந்தலாமா? என்றே மொழிபெயர்த்திருக்கலாமோ என என்ன தோன்றுகிறது. இந்த ஒருவரி மட்டும் சற்று கதையின் மொழியுடன் நெருங்கிச் செல்ல முடியாதென்ற உணர்வை ஏற்படுத்தியது. ஆனால் கதையோட்டம் அதனை சரி செய்துவிட்டது. Wild Cattle என்ற குழுவில் கலை, இலக்கியம், சட்டம், பொருளியல் மாணவர்கள் இருந்தனர். இந்தக் குழுவினரைப் பற்றிய அறிமுகத்தை கொடுக்கக் கூடியதாக கருதத்தக்க “அநீதியை சகித்துக் கொள்ள மறுப்பவர்களை தவிர யாருக்கும் எந்த பெருமையுமில்லை.” என்கிற வரி இக்கதையின் போக்கை உணர்த்தக்கூடியதாக இருக்கிறது. செவ்வாய்க்கிழமை நடக்கும் குழு கூட்டம் ஒன்றின் மூலம் பல்வேறு மாணவர்களுக்கு வகுப்பெடுத்த பல்கலைக்கழகப் பேராசிரியரை விசாரணைக்குட்படுத்துவதே இந்தக் கதை ஆகும். தொடர்ந்து பிராய்லர் கோழிகளைப் போல அலுவலக குமாஸ்தாக்களை பல்கலைக்கழகம் உற்பத்தி செய்கிறது என்ற குறையில் பொருளாதாரத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்று நினைத்த பேராசிரியர் மற்றும் மாணவர்களின் தற்கொலைகள் இக்கதையில் நகர்வு புள்ளிகளாக மாறுகின்றன. அதன் நடுவில் கால்பந்தாட்டம், சண்டை அரங்கம், பூங்கா, மாளிகை போன்றவை அந்நாட்டு மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களை சொல்லும் வண்ணம் அமைகின்றன. இஸ்ரேலிய வீரன், பாலஸ்தீனிய மக்கள் என்று கதைக்குள் வேறு பல தகவல்களும் இடம்பெறுகின்றன. உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவரின் விசாரணை, எடுத்துக்காட்டுடன் நாடுகளின் பெயர்களைச் சொல்லி பொருளாதார வகுப்பு எடுத்ததன் எதிர்வினையாக நிகழும் தற்கொலை ஆகியன இக்கதையில் வலுவூட்டும் பகுதிகளாகும். இதில் தற்கொலை செய்து கொண்ட மாணவன் தன்னை விரும்பும் பெண்ணைக் கூட கவனத்தில் கொள்ளாமல் அடக்குமுறைக்கும் அங்குள்ள கல்வியின் கையாளாகா தனத்தையும் சொல்லிச் சாகிறான்.

    ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த அப்த் அல் ஹமீத் அஹ்மத் என்ற எழுத்தாளர் எழுதிய “அயல் விவசாயி” என்ற கதை ஈச்சமரம், ஓமானிய புகையிலை, ஓமானி(ஏழை), மாரிஷ் ஆகியோரைக் கொண்டுள்ளது. மாரிஷ் என்ற தனியனின் இறப்பு இக்கதையின் முக்கியப் பகுதி. ஓமானுக்கும் ஐக்கிய அமீரகத்துக்கும் இடையில் மாட்டிக் கொண்ட அவன் ஓமானுக்கு போக முடியாமல் மர்ம முறையில் செத்து கிடக்கிறான். அவன் உடலிலெழுந்த வீச்சம் இந்தக் கதையில் முக்கிய புலனுணர்வுப் பொருளாக தொடர்ந்து வருகிறது. பூட்டப்பட்ட வீட்டுக்குள் கிடக்கும் சடலத்தின் வீச்சத்தில் தொடங்கும் கதை மாரிஷ் என்பவன் யார் என்ற மர்மக் கேள்வியில் முடிகிறது. கதை ஆங்காங்கே தொடர்ச்சியைப் பிடித்துச் செல்வதற்கு எத்தனிப்பது இக்கதையின் மொழியில் தெளிவாகத் தெரிகிறது.

   மொரோக்கோவைச் சேர்ந்த அஹமத் பூஸ்ஃபூர் எழுதிய “நொண்டிக்குத் திருமணம் நடக்கிறது" கதையில் “எனக்கு உன்னை அடையாளம் தெரியவில்லை என்று சத்தியம் செய்வேன்” என்ற மொழிபெயர்ப்பு இக்கதையில் தனியே தெரிகிறது. தமிழ் நிலப்பரப்பின் உரையாடல் தன்மைக்கேற்ப இதனைக் கொண்டு வர இன்னும் கூட முயற்சி செய்திருக்கலாமென தோன்றுகிறது. வயதான காலத்தில் திருமணம் முடித்து நொண்டிக் குழந்தை ஒன்றை கொடுத்துவிட்டு கிழவன் ஒருவன் செத்துப் போகிறான். அவனது மூத்த மகன் கிழவனின் புது மனைவியை வேலைக்காரியாக்குகிறான். அந்தப் பெண்ணை ஊரிலுள்ள எந்த ஆண்களுக்கும் பிடிக்கவில்லை. நொண்டி என்ற சொல்லில் வருந்தி சாகும் அவளது பையனின் நினைவில் அவள் பைத்தியமாகி வாழ்கிறாள். இக்கதையில் நொண்டிப் பையனின் வலிகளும் தந்திரங்களும் தொடர்ந்து வருகின்றன. உறவுச் சிக்கல்கள் மற்றும் மோதல்கள் தன் குழந்தை மீதுள்ள அதீத பிரியத்தால் பிற குழந்தைகளை ஒடுக்குதல், கல்விநிலைய செயல்பாடுகள், வணிகம், போர்ச்சூழல் முதலியன இக்கதைக்குரிய தரவுகளாக நிறைந்துள்ளன. அந்தக் கிழவன் புனித யாத்திரை சென்று வந்தபின் கல்யாணம் முடித்ததன் காரணம் என்ன? என்ற கேள்வி இப்போதும் என்னுள் இருக்கிறது. இந்தக் கதை நடக்கிறது மொரோக்காவில் சேராத மக்கள் வாழ்ந்த பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

   பாலஸ்தீனத்தைச் சேர்ந்த சமீரா அஸ்ஸாம் எழுதிய “அவரும் அலாரம் கடிகாரமும்” கதை தொழுகைக்குத் தினமும் காலையில் எழுப்பும் அழைப்பாளரின் தன்மையும் அவருடைய மரணமும் பற்றிய கதை ஆகும். தொழுகைக்கு நேரத்தலில் எழுவதற்கென ஒரு பணியாளை வைத்துள்ள நடைமுறையை இக்கதை மூலம் அறியமுடிகிறது. அவரும் தொடர்வண்டி ஏறி வரும் தொலைவிலிருந்து வேலைக்கு வருகிறார். பெரும்பாலும் எவரிடமும் அதிகம் பேசாத மனிதர்கள் தங்களுக்குள் ஒரு குடும்பத்தை உருவாக்கி, நிர்வகிப்பதும் தனிமையில் செத்துப்போவதும் இக்கதையில் அப்பட்டமாகத் தெரிகிறது. தான் நாள்தோறும் சந்தித்த ஆனால் அதிகம் பேசிக்கொள்ளாத மனிதன் ஒருவன் என்ன ஆனான் என்ற உள்ளுணர்வில் தேடிப் போகும் ஒரு மனிதன் இக்கதையை நகர்த்துகிறான். வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இக்கதையின் மொழிபெயர்ப்பு மிக கச்சிதமாக அமைந்துள்ளது. ஒரு மனிதனின் இறப்பு தனித்த அறைக்குள் நிகழ்வதைப் பற்றிய இரண்டாவது கதையாக இத்தொகுப்பில் “அவரும் அலாரம் கடிகாரமும்” கதை இருக்கிறது.

    சிரியாவைச் சார்ந்த சக்காரியா தாமிர் எழுதிய “பத்தாவது நாளில் புலிகள்” என்ற கதையை ஒரு படிமக்கதையாகக் கொள்ளலாம். புலி ஒன்று தான் சுதந்திரமாக வாழ்ந்த காட்டைவிட்டு சிறைக்கூண்டில் அடைபட்டு தனது முந்தைய நிலையிலிருந்து படிப்படியாக மாறி வேட்டைத்தந்திரத்தை இழந்த கோழைத்தனமுடைய அடிமையாக மாறியதை இக்கதைக் கூறுகிறது. இக்கதையில் வரும் புலி இருக்கும் இடத்தில் மனிதனைப் பொருத்தலாம். காட்டில் சுதந்திரமாக வாழ்ந்து திரிந்த மனிதன் தற்போது பல்வேறு வகையில் பண்பாடடைந்து நகரத்திற்குள் சுருங்கிக் கிடப்பதை புலியை வைத்து கதை சொல்வதாக நான் ஈன் வாசிப்பில் உணர்கிறேன். விடாப்பிடியான கொள்கையுறுதி உடையோர் கூட எப்படி காலவேகத்தில் அடிபட்டு தன்னைச் சமரசம் செய்துகொள்கிறார் என்பதையும் இக்கதையின் வழி அறியலாம். இக்கதையில் புலி பூனையை போல கழுதையைப் போல கத்துவதோடு வைக்கோல் தின்னும் நிலையை அடைகிறது. தன் முந்தைய வாழ்க்கையை மனதில் ஒருமித்துக் கொண்டு வரக்கூட முடியாத அளவுக்கு புலி பத்து நாட்களுக்குள் மாறுவதாக இக்கதை அமைகிறது.

    ஜோடானைச் சேர்ந்த ஹிஷாம் பஸ்தானி எழுதிய “நள்ளிரவுக்குப் பிறகான சில கணங்கள்” கதை சிந்தனைகளின் பிளவுகளாக இருக்கிறது. தனிமையில் பிளந்து வரும் சிந்தனைகளாலேயே இக்கதை உருக்கொண்டுள்ளதெனலாம். “சிகரெட்டென்பது தனக்குள்ளிருக்கும் சிறு புழுக்களை உட்கொண்டு மென்று துப்பும் பெரிய புழு. அவை என் வாய்க்குள் வழுக்கிக் கொண்டு போகின்றன, எனது நுரையீரல்களை நிரப்பி, அங்கு ஒரு சிறிய, இரைச்சலான களியாட்டத்துக்கு பிறகு, என்னுடைய உதிரத்தோடு ஒன்றுகலந்து ஓடத்தொடங்குகின்றன.” என்ற பத்தி இக்கதையின் தொடக்கத்தில் அமைந்துள்ளது. இது இக்கதையை வாசிக்க உந்தியது. நுரையீரல் செவுளாக மாறுதல், நீட்சே என்று இக்கதை அதீத கற்பனையுடன் உள்முகப் பேச்சாக ஆங்காங்கே விரிகிறது. இந்த கதையின் மொழிபெயர்ப்பில் தமிழ்ப் பொருத்தப்பாட்டை கச்சிதமாகச் செய்திருப்பதோடு புனைவாக்க நிலையும் சீராக நகர்த்தப்படுகிறது. இரவு நேரங்களில் வெளிப்படும் உதிரியான சிந்தனைகளுக்குள்ளிருக்கும் கவித்துவமும் தத்துவார்த்த சிந்தையின் உடைந்த பாதியும் இக்கதைக்குள் காட்சிபடுத்தப்பட்டிருக்கின்றன‌.

   மாசேன் மாரூஃப் என்ற பாலஸ்தீனத்தில் பிறந்த ஐஸ்லாந்து எழுத்தாளர் எழுதிய “காளைச்சண்டை வீரன்” கதை டோமிங்குயின் என்ற காளைச்சண்டை வீரனின் அங்கி ஒன்று எவ்வாறாலாம் பாடுபடுகிறது என்பதும் காளைச்சண்டை வீரனாக மாற முனைந்தவர் செய்த ஏமாற்றுத்தனங்களும் கதையாக்கப்பட்டுள்ளது. அங்கி ஒன்றை வைத்துக்கொண்டு அவன் செய்யும் அலம்பல்களால் இக்கதை நிறைகிறது. எனக்கு சின்ன வயதில் சொல்லப்பட்ட கதைகளில் “புலி வருது” என்ற வாய்மொழிக்கதை பொய் சொல்லாமையை வலியுறுத்தும் விதமாக சொல்லப்படும். அக்கதையில் புலி வருகிறது என இரண்டு முறை பொய் சொல்லி ஊரை ஒருவன் ஏமாற்றுவான். மூன்றாவது முறை அவன் புலி வருகிறது என சொல்லும்போது இம்முறையும் ஏமாறத் தயாராக இல்லை என மக்கள் இருப்பர். அப்போது உண்மையிலேயே புலி வருவதாக கதை முடியும். இதன்வழி ஒரு பொய் தன்னை மட்டுமன்றி சுற்றியுள்ளவர்களையும் எப்படிப் பாதிக்கும் என்பது சொல்லப்படுகிறது. “காளைச்சண்டை வீரன்” கதையின் கதைகூறு முறை “புலி வருது” கதையைப் போலவே இருப்பதாகத் தோன்றியது. மூன்று முறை செத்து செத்துப் பிழைப்பதாக நடிப்பவன் ஒரு கட்டத்தில் உண்மையிலேயே சாகிறான். அவன் செத்த பின் அங்கியை கீழே போட கொண்டு சென்ற போது அந்த அங்கி டோமிங்குயின் என்ள என்ற புகழ்பெற்ற காளைச்சண்டை வீரனின் அங்கி என தெரியவந்து நல்ல விலைக்கு விற்கப்படுகிறது. 

     ஈராக்கைச் சேர்ந்த எழுத்தாளர் ஹஸன் ப்ளாஸிம் எழுதிய “ஈராக்கின் கிறிஸ்து” கதை டேனியல் என்ற மனிதன் தனது தாயைக் காப்பாற்ற தன்னை மனித வெடிகுண்டாக மாற்றிக் கொண்டதைப் பற்றிய கதையாகும். இந்தக் கதையின் ஆரம்பப் பகுதியில் வரும் அவனது அறிமுகம் ஜெயகாந்தனின் “யாருக்காக அழுதான்” கதையில் வரும் கதாபாத்திரத்தை ஒத்ததாக இருக்கக் காணலாம். பிறரால் ஏளனத்திற்கு உள்ளாகும் மனிதனொருவனின் உள்மனம், ஆற்றல், அறிவார்த்தச் செயல்பாடு, தியாகம் ஆகியவற்றின் உருவாகவே இது போன்ற கதாபாத்திரங்கள் படைக்கப்படுகின்றன. போர்க்காலச் செயல்பாடுகளைச் சொல்லும் இக்கதையில் போருக்கு நடுவே ஆன்மீக உளவியல் குறித்த புத்தகங்கள் பல ஈராக்கில் மொழிபெயர்க்கப்பட்ட தகவலையும் கதைத் தனக்குள் கொண்டுள்ளது. ஈராக் அமெரிக்காவிற்கு இடையில் போர் நடந்த காலகட்டத்தில் இக்கதை எழுதப்பட்டிருப்பதை அதில் இடம்பெறும் உரையாடல்கள் மூலம் அறிய முடிகிறது. தனிமையில் உளன்று ஆழ்ந்த சிந்தனையையும் முன் நடப்பதைச் சொல்லக்கூடிய ஆற்றலுடையவனாக விளங்கும் பகுதிகளும் சிறப்பாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. ஒரு உணவகத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த வந்தவனுடனான மோதலின் இறுதியில் தன் தாயைக் காப்பாற்றி விட்டு மனித வெடிகுண்டாக மாறி டேனியல் இறப்பதாக கதை முடிகிறது. 

    குவைத்தைச் சார்ந்த லைலா அல் -ஓத்மன் எழுதிய “புகைப்படம்” கதையில் 40 வயதுக்கு மேலான பெண்ணொருத்தி எந்தவித ஆண் தொடர்பும் இல்லையென்றாலும் கூட தான் கேட்டது மற்றும் பார்த்ததை வைத்து தானும் ஒரு ஆணுடன் தொடர்பில் இருக்க வேண்டுமெனவும் அது தன்னுடைய கணவன் வேறொரு பெண்ணுடன் உறவிலிருப்பதற்குப் பின் இருக்க வேண்டும் எனவும் கற்பனைச் செய்து கொள்கிறாள். தன் கணவரின் நண்பர்களோடு அப்படி இருக்கலாமா? என யோசிக்கிறாள். இப்படியான யோசனைகள் தீவிடமடைந்து நின்ற பொழுதொன்றில் கடைக்குச் சென்றபோது அவள் 50வயதுக்கு மேலான பெண்ணொருத்தியைப் பார்க்கிறாள். அவளை அதற்குமுன் எங்கோ பார்த்ததான நினைவில் யோசிக்கும்போது அவளது மகன் வெளிநாட்டில் படிக்கும் காலத்தில் ஒரு வயது முதிர்ந்த பெண்ணுடன் மதுவருந்திவிட்டு உறவு கொண்டதாகச் சொல்லி கடிதத்துடன் இணைத்து அனுப்பிய புகைப்படம் அவளது நினைவுக்கு வந்தது. அதே பெண்ணைத் தான் அவள் அங்கு எதிர்கொண்டிருந்தாள். இந்த சம்பவம் நிகழ்ந்த பின் அவளுக்குள் இருந்த விருப்பம் உடைகிறது. தன் சொந்த மகனின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சி அவளது விருப்பத்தில் எப்படியான மாறுதல்களை ஏற்படுத்துகிறது என்பதை இக்கதை இறுதியில் சொன்னாலும் கூட அவளுக்கு தோன்றிய விருப்பத்திற்குரிய காரணம் சமூகத்தாலும் சமூகத்திலிருந்து வெளிவரும் கலை படைப்புகள் மற்றும் தொடர்புக்கருவிகளாலும் எப்படி உற்பத்தி செய்யப்படுகிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டியுள்ளது.

    எகிப்தைச் சார்ந்த நகீப் மெஹ்ஃபூஸ் எழுதிய “அறை எண் 12” கதை விடுதிக்கு வரும் ஒரு பெண்ணையும் அவளைத் தேடி வரும் பலரையும் பற்றியது. பெண்ணொருத்தி விடுதியில் ஒருவர் மட்டும் தங்கும் அளவிலான அறை ஒன்றையெடுத்து விட்டு ஏராளமான உணவுகளையும் வருவிக்கிறாள். அந்த விடுதிக்கு அவளைத்தேடி மகப்பேறு மருத்துவரிலிருந்து பிணம் கழுவுபவன் வரை எண்ணற்றோர் வருகின்றனர். அதில் பிணம் கழுவுபவனைத் தவிர்த்த அனைவரும் அறைக்குள் மேலாளர் மூலம் விசாரித்து அனுப்பப்படுகின்றனர். நேரம் ஆக ஆக குடித்துக் கூச்சலிட்டு பிறருக்கு தொந்தரவு செய்கின்றனர். இதற்கு நடுவில் பிணம் கழுவுபவனை அந்தப் பெண் ஏன் கீழே காக்க வைத்திருந்தாள் என்ற கேள்வியும் எழுகிறது. அச்சமயம் சூறாவளி மழை பெய்த போது அவர்கள் இருந்த அறை கடுமையாக பாதிப்படைகிறது‌. அவர்கள் அனைவரையும் மேலாளர் காப்பாற்ற முயலாமல் சூறாவளி மழைக்கும் அதனாலான பாதிப்புகளுக்கும் ஒப்புக்கொடுத்தார் என்பதாக இக்கதை முடிகிறது. இக்கதையும் விறுவிறுப்பான நடையைக் கொண்டதாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

     அல்ஜீரிய எழுத்தாளர் ஃபாதிலா அல் -ஃபாரூக் எழுதிய “என் கனவுகளின் பெண்” கதை ஏமாற்றப்பட்ட தத்துவம், வேதியியலுடன் ஒரு பெண்ணைப் பற்றிய கதை. மாணவனின் கேள்வியால் கிண்டப்படும் ஆசிரியையும் அவளை ஏமாற்றி சென்ற அந்த மாணவனையும் பற்றியதாக இக்கதை இருக்கிறது. திருமணத்தைக் கடந்த காதல் பற்றி பேசி மரபிலிருந்து வெளிவரச் சொல்லும் ஆண் சில நாட்களிலேயே ஒரு திருமணம் செய்து கொள்கிறான். சொல்வதொன்றும் செய்வதொன்றுமான தத்துவவாதிகளின் தன்மையை இந்த இடத்தில் கதையாசிரியர் ஆழமாகப் பதிவு செய்கிறார். ஒவ்வொருவரும் பிறரிடையே எத்தகைய தேவைகளுக்காகப் பழகுகிறார்கள் என்பதைப் பற்றிய வெளிப்பாட்டை இக்கதை முன்வைக்கிறது. மேலும் இதுபோன்ற சம்பவங்கள் தற்போது பெருகி நிற்பதையும் நாம் கவனிக்க வேண்டியுள்ளது.

    கார்த்திகைப் பாண்டியன் தேர்வு செய்த கதைகளில் தனிமையுடன் கூடிய ஆண்களும் அவர்களது தாயும் அதிகமாக வருகின்றனர். மேலும் தனியறையில் நிகழும் சாவு, அதீதமாக யோசனையில் ஆழ்ந்திருக்கும் கதாபாத்திரங்கள், விந்தையான நடைமுறை, காரணமற்று வெளிப்படும் உணர்வுக்குள்ளிருக்கும் காரணங்கள் என்று பலவகைகளில் இக்கதைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு பாணியில் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றன.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அசல் அரங்கப் பிரதி - அழகுராஜ் ராமமூர்த்தி

"கவிப்பேரரசர்களின் கவியமுதம்" நூலறிமுகம் - அழகுராஜ் ராமமூர்த்தி

கி.ராஜநாராயணன் பற்றி -ரா.அழகுராஜ்