"கவிப்பேரரசர்களின் கவியமுதம்" நூலறிமுகம் - அழகுராஜ் ராமமூர்த்தி



        நான் கல்வியியல் இளநிலைப் பட்டப்படிப்பு படிக்கும் காலகட்டத்தில் கல்வியியலைத் தாண்டி அதிகமாக இலக்கிய வாசிப்பிற்குரிய நேரம் மற்றும் சூழல் வாய்த்தது. ஸ்ரீ சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரியில் மக்கள் தொடர்பு அலுவலராக இருக்கும் செ.பாலகிருஷ்ணன் ஐயா அவர்கள் பழந்தமிழில் புலமை பெற்றவர். 83 வயதைக் கடந்துள்ள அவரது இன்றைய செயல்பாடுகள் என்னை போன்ற இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டியன. சுறுசுறுப்பும் ஓயாத உழைப்புமாக செயல்படும் அவர் எப்போதும் கண்டித்துணர்த்துவதோடு பாராட்டும் குணமும் ஒருங்கே உடையவர். பழந்தமிழில் புலமை பெற்ற தமிழாசிரியர்கள் இக்கால இலக்கியத்தின் மீது அதிக கவனம் செலுத்துவதில்லை. அதன் தன்மை மீது ஏதோ ஓர் ஒவ்வாமை உடையவர்களாகவே காணப்படுகின்றனர். அந்தக் கணக்கில் ஐயாவையும் சேர்க்கலாம். இருந்தாலும் மாணவர்களின் வாசிப்பை ஊக்குவிக்கக்கூடியவராக தினமும் புதிதாக எதையேனும் வாசித்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதை பார்க்கும்போதெல்லாம் வலியுறுத்தாவார். நானும் சந்துரு அண்ணனும் மதிப்பெண் சான்றிதழ் வாங்க போன அன்று கல்லூரியில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரையும் சந்தித்து வந்தோம். அப்போதுதான் ஐயா “கவிப்பேரரசர்களின் கவியமுதம்” என்ற தன்னுடைய நூலை வாசிக்கக் கொடுத்தார். அந்த நூல் நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் தயாராகிக் கொண்டிருந்தது. இந்நூலில் இடம்பெற்றிருக்கக்கூடிய “சிலம்பில் ஒரு சிறப்பு” என்ற கட்டுரையை அப்போதே நான் படித்திருக்கிறேன்.


     வருடம் கழித்துத் போனாலும் மாறாத அன்புடன் உபசரித்து பழந்தமிழ் இலக்கியத்தையும் அதன் சுவையையும் தமிழ் மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டும் என வலியுறுத்தியதோடு பல்வேறு விடயங்களை பேசியதோடு தனது நூலையும் அன்பளிப்பாக வழங்கி படித்துவிட்டு எப்படி இருக்கிறது என சொல்ல வேண்டும் என்றார். 


      முதன்மைக் குறள், கம்பன் நடத்திய குடியரசு தின விழா, தர்மத்தின் தலைமகன், வள்ளுவர் போற்றும் மழலைச் செல்வம், சிலம்பில் ஒரு சிறப்பு போன்ற கட்டுரைகளை நூலாசிரியர் பேசி நான் கேட்டிருக்கிறேன். அவற்றை வாசிக்கும்போது அவர் பேசிய காட்சிகள் நினைவிற்கு வருகின்றன. நூலில் தன்னுடைய பார்வையை வெளிப்படுத்தும் பகுதிகளில் “சிற்றறிவுக்கு எட்டிய வகையில்” என்று ஏன் மீண்டும் மீண்டுமாக நூலில் பயன்படுத்தியுள்ளார் எனத் தெரியவில்லை. இன்றைய இலக்கியச் சூழலில் அபத்தமும் மலினமும் மிகுந்த கட்டுரைகள் பல வெளிவருகின்றன. அப்படியிருக்க பழந்தமிழ் இலக்கியங்களில் அதிலும் குறிப்பாக காப்பியங்களை மையப்படுத்தி எளிமையும் தெளிவுமுள்ள மொழிநடையில் வரும் ஒரு நூலில் தயக்கமின்றி அவர் தனது கருத்தை சொல்லியிருக்க வேண்டும். சிற்றறிவுக்கு எட்டிய வகையில் என்ற சொல்லை திரும்பத் திரும்ப பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. 


      அகர முதல எழுத்தெல்லாம் எனத் தொடங்கும் திருக்குறளின் முதல் குறளை மையமாக வைத்து பலர ஆராய்ச்சிகள் மேற்கொண்டுள்ளனர். அவை தனி நூலாகவே வெளிவந்திருக்கின்றன. அப்படியிருந்தும் “முதன்மைக் குறள்” என்ற கட்டுரை அதன் எளிமையான முன் நகர்த்தும் பாணியில் நல்ல கட்டுரையாக மாறியுள்ளது. இந்த எளிமையான உரையாடும் பாணியிலான மொழிநடை தான் இந்த நூலுக்குரிய பலம் எனலாம்.


     நூலாசிரியர் பழந்தமிழ் இலக்கிய தலைப்புகளாலான பட்டிமன்றங்களில் பேசியவர் என்பதால் அவரே கேள்வி எழுப்பி அதற்குரிய தீர்வை சமரசமாக முடிப்பதற்குரிய இலக்கியச் சான்றுகளை எல்லாம் பொருத்தமாக சுற்றி ஒவ்வொரு கட்டுரையையும் முடித்திருக்கிறார். இதற்கு சரியான எடுத்துக்காட்டாக அமைவது “இது தேவைதானா?” என்கிற கட்டுரை. “தர்மத்தின் தலைமகன்” கட்டுரையில் மைத்துனன் என்ற சொல்லைப் பயன்படுத்தி அதற்கு கொடுக்கும் விளக்கம் அந்த கட்டுரையை சிறப்புக்குரியதாக மாற்றுகிறது. மகாபாரதத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் தனிநிலை சிறப்புக்குரிய பாத்திரங்களாக பார்க்கத் தகுந்தவை. அதில் வரும் கதாபாத்திரங்களுக்குள்ளே ஒட்டுமொத்த இலக்கிய கதாபாத்திரங்களையும் அடக்கி விட முடியும் என்று கூட சொல்லலாம். அதில் கர்ணன் தென்னிந்திய பகுதியிலேயே அதிகம் பேசப்படக் கூடியவன் என பேராசிரியர் பா.இரவிக்குமார் அடிக்கடி சொல்வார். அதற்கு வலு சேர்க்கும் வகையிலேயே தர்மத்தின் தலைமகன் கட்டுரை அமைகிறது. கர்ணன் கேட்ட வரத்தை வாசிக்கும் போது விவிலியத்தில் வரும் சாலமோன் அரசன் தான் நினைவில் வந்தான். கடவுள் அவனிடம் உனக்கு என்ன வேண்டும் எனக் கேட்டபோது ஞானத்தை கேட்டான் என்பதாக அப்பகுதி வரும். இவ்விரு நிகழ்வுகளுக்கும் இடையில் சில ஒற்றுமை கூறுகள் மறைமுகமாக தங்கி இருக்கின்றன


        காந்தி ராம ராஜ்ஜியம் கொண்டு வருவதாக சொன்னது பலவாறு விமர்சனத்திற்கு உள்ளானது உண்டு. காந்தியின் குறியீட்டில் தங்கியிருந்த ராமன் யார் என்பதை அறிந்து கொள்ளாமலே இங்கு விவாதங்கள் நடந்தேறியிருக்கின்றன. என்னுடைய மற்றொரு கட்டுரையில் 45 ராமாயணங்கள் இருந்த செய்தியை குறிப்பிட்டிருக்கிறேன். இந்தக் கட்டுரைகள் கம்பன் சித்தரித்த ராமன் இறைவனாகவும் அதே சமயம் குடியரசு ஆட்சியை நிறுவுபவனாகவும் இருந்ததை அவனது முடிசூட்டு விழா பாடலை வைத்து நூலாசிரியர் நிறுவியிருக்கிறார்.


         ராமனுக்கு இணைநிலை கதாபாத்திரமாக இலக்குவன் விளங்கும் சிறப்பை நிகழ்ச்சிகளின் ஆதாரங்களோடு “இலக்குவன் காட்டிய அடைக்கலச்சிறப்பு” என்கிற கட்டுரை அமைகிறது. இலக்குவனின் அறிவுக்கூர்மையை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சொல்பவராகவே நூலாசிரியர் இருக்கிறார். இந்நூலிலுள்ள கம்பராமாயணத்தை மையம் கொண்ட கட்டுரைகளுக்கும் ஓரளவு இக்கருத்து பொருந்தும். ராமன் பலவீனப்பட்ட இடங்களில் எல்லாம் அவனுக்கே உரிய உறுதுணையாக பலமாக விளங்குபவன் இலக்குவன். அவனது கொடுத்த வாக்கில் உண்மையுடன் இருக்கப் போராடும் நடைமுறையை நூலாசிரியர் முக்கியப் பண்பாக மிக அழுத்தத்துடன் இக்கட்டுரையில் சுட்டிக் காட்டுகிறார்


        “வள்ளுவர் போற்றும் மழலைச் செல்வம்” கட்டுரையில் மக்கட்பேறு, புதல்வரை பெறுதல் என்ற இரண்டு தலைப்பு குறித்த முரணில் கட்டுரை தொடங்குகிறது. உரை வேறுபாட்டு நூல்களில் சொல்லப்பட்டிருக்கும் செய்திகளை ஓரிரு பத்திகளில் மிக எளிமையாக நூலாசிரியர் கடத்தியதோடு குழல், யாழ் என்ற இரண்டு சொற்களை வைத்து ஆண் குழந்தை, பெண் குழந்தை என்ற விளக்கம் ஒன்றையும் முன் வைக்கிறார். வில்லிபுத்தூரார், கம்பர், பாரதியார் பாடல்கள் போன்றவற்றையும் உடன் சான்றாக கொண்டு இக்கட்டுரை முடிகிறது. இந்த நூலில் கட்டுரைக்கு பயன்பட்ட நூல்களின் விவரங்களை ஒவ்வொரு கட்டுரைக்குப் பின்னும் கொடுத்திருக்கலாம. கட்டுரைக்குள் உரையாசிரியர்களின் பெயர்கள் தொடர்ந்து பரிமேலழகர், கிருபானந்த வாரியார் என்று பயன்படுத்தப்பட்டாலும் கூட நூல் விவரங்களை கொடுத்திருந்தால் அது இந்த நூலுக்கு கூடுதல் சிறப்பாக அமைந்திருக்கும்.


       திருக்குறளின் ஊழியலை மையமிட்டு மாறுபட்ட கருத்துகள் உரையாசிரியர்கள் இடையே இருந்து வந்துள்ளது. ஊழியலை தனி இயலாக எடுத்துக் கொள்ளாத உரையாசிரியர்கள் கூட இருக்கின்றனர். இந்நூலில் விதி, ஊழ் ஆகியவற்றை மையம் கொண்டதாக “கம்பன் காட்டிய வியத்தகு விதி” கட்டுரை அமைகிறது. பஞ்சவடி, வர்ணம் என்ற சொல்லுக்குரிய விளக்கங்கள் கட்டுரையின் சிறப்பான பகுதிகளாகின்றன. கம்பராமாயணத்தை முழுமையாக படித்து பல நிலைகளில் உள்வாங்கியதன் விளைவாகவே இந்தக் கட்டுரை முன் நடந்த காட்சிகள் பின் நடக்க இருக்கும் காட்சிகளைத் தேவைப்படும் இடங்களில் நூலாசிரியர் கோர்வையாக பயன்படுத்தி இருக்கிறார். திருவள்ளுவர், விவேகானந்தர் பற்றிய குறிப்புகள் பொருத்தமுடையதாக அமைகிறது. நூலாசிரியர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அதிகம் போற்றுவதாகப் படுகிறது. அதே பிரதமரின் தலைமையிலான அரசுதான் தொல்லியல் ஆய்வறிக்கையை இன்று வரை வெளியிடாமல் ஆண்டுகளை கடத்தி வருகிறது என்பதையும் இவ்விடத்தில் நான் குறிப்பிட்டாக வேண்டியுள்ளது. ஒருபுறம் போற்றுவதும் மறுபுறம் இடிப்பதுமான போக்கைக் கொண்ட இந்திய அரசை தமிழில் துறைசார் அறிஞர்களும் கல்வியாளர்களும் நன்கு அறிந்தே இருக்கின்றனர். நூலாசிரியரின் பிரதமர் குறித்த கருத்து மட்டும் உவப்பளிக்கவில்லை.


       “கம்பன் காட்டும் இராமனின் பேராண்மை” கட்டுரையில் அனுமன் காட்டும் மறக்கருணை கட்டுரையின் தொடக்கத்திலேயே சொல்லப்படுவது நேர்த்தியாக காட்சியளிக்கிறது. இந்தக் கட்டுரையில் வரும் “மறவனாக ராமன்” என்ற வரியில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும் கூட திருவள்ளுவர், பரிமேலழகர் ஆகியோருடைய சான்றுகளுடன் இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள பொருள் நெறி விளக்கம் நன்றாக அமைந்திருக்கிறது. அதிலும் கும்பகர்ணன் தான் இந்தக் கட்டுரையில் முதன்மை இடம் பெறுவதாக நான் காண்கிறேன். வருகின்ற சில பகுதிகளிலும் கூட கும்பகர்ணனின் பாத்திர வகிப்பு அத்தகைய முதன்மையைக் கொடுக்கும் வகையில் அமைகிறது.


       “ஆற்றல் மிக்க அங்கதன் தூது” கட்டுரையில் தூதுக்கான இலக்கணம், திருக்குறள், புறநானூற்று பாடல் என கட்டுரை தூதை மையமிட்ட பல செய்திகளை உள்ளடக்கி காணப்படுகிறது. எதிர் நாட்டு அரசனை தரக்குறைவாக நாய் என்றும் தன்னைச் சிங்கம் என்றும் சொன்னதை தூதருக்குரிய இலக்கணத்தோடு நூலாசிரியர் பொருத்திப் பார்க்கும் இடம் இக்கட்டுரையில் முக்கியமான பகுதி. தூது வேண்டாம் எனச் சொல்லும் காரணங்களும் ஒரு வகையில் முக்கியத்துவம் உடையதாக கட்டுரையில் அமைந்திருக்க காணலாம். 

      “சிலம்பில் ஒரு சிறப்பு” கட்டுரை மூன்று சிலம்புகளைச் சுற்றித் தொடங்குகிறது. இதில் கொள்ளைக்கான இரட்டைத் தண்டனை என்கிற தீர்ப்பையும் அது வந்ததற்கான காரணமும் இரட்டை தண்டனை நிறைவேறிய விதமும் இக்கட்டுரையில் விளக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கட்டுரை சிறிய கட்டுரையாக இருப்பினும் உள் பொதிந்துள்ள தகவல்களும் எடுத்துரைப்பியல் முறையும் இதற்கு வலு சேர்க்கின்றன‌.


      வாலி வதையும், வாலியை வதைத்த முறையும் போற்றத் தகுந்ததே! என்ற கட்டுரையில் வரமும் அதனால் விளைந்த போர், போர்க்களங்களும் எளிமையாக விளக்கப்பட்டுள்ளது. மேலும் புலவர் திலகம் கீரன், கிருபானந்த வாரியார் இராஜகோபாலச்சாரி ஆகியோருடைய விளக்கங்கள் எல்லாம் இக்கட்டுரையில் மேற்கோளாக சுட்டப்பட்டுள்ளன. “மங்கையர் மனநிலை உணர வல்லரோ?” என்ற கட்டுரை ராமன் சீதையை பரீட்சித்தது, கூனி என பல பாதையில் விரிந்து செல்கிறது. இக்கட்டுரையிலும் கிருபானந்த வாரியார் மற்றும் ராஜகோபாலச்சாரியார் உரைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. விதிப்பயனைச் சொல்லும் வகையிலே இக்கட்டுரையும் அமைந்திருக்க காணலாம். ராமன் கூறிய பதினாறு பழிகள், சீதையின் மறுமொழி என இக்கட்டுரை பல்வேறு செய்திகளை உடன் தாங்கியுள்ளது.


        நூலின் இறுதிப் பகுதியில் வாழ்க்கையில் நடந்த இன்பகரமான சூழல்களை விளக்கும் பாடல்கள், வாழ்த்துப் பாடல்கள், தூது, போட்டிகளுக்கும் இதழ்களுக்கும் அனுப்பிய பாடல்களென மரபுக் கவிதைகள் இடம்பெற்றிருக்கிறது. இந்நூலினை அன்புடன் வழங்கிய நூலாசிரியர் அவர்களுக்கு நன்றி. இந்நூலுக்கு தி. ராஜகோபாலன் மகிழ்வுரை வழங்கியுள்ளார். மகிழம் சிவ‌. தாமோதரன் ஆசியுரை வழங்கியிருக்கிறார். சுகிசிவம் மற்றும் கு.ஞானசம்பந்தன் ஆகியோர் அணிந்துரை எழுதியிருக்கின்றனர்.

-அழகுராஜ் ராமமூர்த்தி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அசல் அரங்கப் பிரதி - அழகுராஜ் ராமமூர்த்தி

கி.ராஜநாராயணன் பற்றி -ரா.அழகுராஜ்