அசல் அரங்கப் பிரதி - அழகுராஜ் ராமமூர்த்தி
அசல் அரங்கப் பிரதி - அழகுராஜ் ராமமூர்த்தி
சிகப்புக் கண்ணாடி தமிழ் நாடகங்கள் -ஞா.கோபி
யாழ் அரங்கத்தில் நாடக உரையாடலை உரையாடுவதற்கான வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டிருந்தது. நாடகக் கலைஞர்கள் உரையாடிய அந்நிகழ்வில் கலைஞர் அல்லாத நான் எப்படி உரையாடுவது என்ற தயக்கத்துடனே அந்த வாய்ப்பை விட முடியாமல் உரையாடலுக்குச் சென்றேன் அந்நாளில் நினைவு நூலாக கொடுக்கப்பட்டது ஞா. கோபி எழுதிய சிகப்புக் கண்ணாடி நாடகப் பிரதி.
2006, 2007, 2009, 2014, 2015, 2017, 2018 என்று 2006 இல் இருந்து 2018 வரையிலான காலப்பகுதியில் வெளியாகி நடிக்கப்பட்ட நாடகங்களின் தொகுப்பாக அமைந்திருக்கும் சிகப்புக் கண்ணாடி நாடக நூல் அசலான அரங்கப் பிரதி. நாடகம் வெளியான வருடங்களைக் குறிப்பிடுவதற்கும் நாடகத்தின் உள்ளடக்கத்திற்கும் இருக்கும் தொடர்பு முக்கியமானது. இதனை "நான் வளர்மதி" நாடகத்தை வாசிக்கும்போது நன்கு விளங்கிக்கொள்ளலாம். நாடக அரங்கப் பிரதிக்கும் எழுத்துப் பிரதிக்கும் இடையில் வித்தியாசங்கள் உண்டு. பொதுவான நாடக இலக்கியப் பிரதிகளில் உரையாடல்களே நாடகத்தை நகர்த்திச் செல்லும் அம்சம் அதிகம் இடம் பெற்றிருக்கும். காட்சிகள் மாறும் இடங்களிலும் நாடகத்திற்குள் தேவைப்படும் இடங்களிலும் அடைப்புக்குறிக்குள்ளும் அடைப்புக்குறி இல்லாமலும் நாடகத்தின் நிகழ்த்துச் செயல்பாடுகள் குறிப்பிடப்பட்டு இருக்கும். ஆனால், அரங்கப் பிரதியில் அதிலும் குறிப்பாக நவீன நாடக அரங்கப் பிரதியில் உடல் அசைவுகளுக்கும் உடல் மொழிகளுக்குமே முதன்மை இடம் தர வேண்டியுள்ளது. வசனங்களைக் காட்டிலும் நவீன நாடக பார்வையாளர்கள் உடல் மொழியைக் காட்சிப்படுத்தும் தன்மைக்கு பழக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர். அப்படியான பார்வையாளர்களும் நாடகக் கலைஞர்களும் அரங்கப் பிரதியை வாசிக்கும்போது அவர்களது நாடகம் சார்ந்த புரிதிறனுக்குள்ளான இயக்கம் சற்று தீவிரப்படுவதற்கான அத்தனை சாத்தியங்களையும் உண்டு. இவற்றை எல்லாம் உள்வாங்கி நிற்கக் கூடிய தேவை நவீன நாடக அரங்க பிரதிக்கு உண்டு. அதனை சிகப்புக் கண்ணாடி நிறைவு செய்கிறது.
அரங்கத்தில் உள்ள நாடக வெளிப்பாட்டு முறையை பிசிறு தட்டாமல் சொல்லும் இப்படியான நாடகப் பிரதிகள் நாடக கலைஞர்களுக்கு பல வகைகளில் பயனுள்ளவை. நாடக இலக்கியத்தில் உரையாடல்களே பெரும்பகுதியாக இருப்பதால் நிகழ்விடம் பற்றிய பின்னணியை மனதில் நிறுத்தி எளிமையாக அவற்றை கதாபாத்திரங்களை வைத்தே வாசித்துக் கடந்து விடலாம். ஆனால், அரங்கப் பிரதியை வாசிக்கும்போது ஒரு முழுமையான அரங்கத்தை மனக்கண் முன் நிறுத்தி மிகப் பொறுமையுடன் அதை நிகழ்த்திக் கொண்டே வாசித்தால் மட்டும் தான் நாடகமும் அதில் வரும் கலைஞர்களும் கலைஞர்களின் அசைவும் புரிபடும். சிந்தனை சற்று விலகினால் கூட பிரதியில் நிகழ்த்தப்படும் நிகழ்வுகளில் சறுகலைச் சந்தித்து தொடர்ச்சி அறுபட்டுவிடும். இப்படியான சவால் நவீன நாடக அரங்கப் பிரதியை வாசிப்பதில் உள்ளது. இதில் ஆறுதலான விஷயம் இந்நூலில் உள்ள நாடகங்கள் அனைத்தும் ஒரே மூச்சில் வாசித்து முடிக்கும் வடிவத்தில் அமைந்திருப்பது தான்.
நாவல்கள், நாடக இலக்கியப் பிரதிகள் போன்ற நாம் பகுதி நேரமாக வைத்து வாசிக்க முடியும். அரங்கப் பிரதியில் அப்படிச் செய்ய முடியாது. அப்படி வாசித்தால் வாசிப்பின் அனுபவத்தையும் பெற முடியாது. ஏனென்றால் கலைஞர்களின் நகர்வுகளாலும் அசைவுகளாலும் இத்தகைய நாடகங்கள் கட்டமைப்பு செய்யப்படுகின்றன. எழுத்து மொழியைக் காட்சி மொழியாக நிகழ்த்தும் வாசிப்பு முறையில் அரங்கப் பிரதியை வாசிக்க வேண்டியிருப்பதால் இது பிற இலக்கிய வகை வாசிப்புகளிலிருந்து வேறுபட்டிருப்பதைக் காணலாம். உரையாடல்கள் தேவைப்படும் இடங்களில் மட்டுமே அமைகின்றன. ஆரம்பகால நவீன நாடகங்களிலும் அதற்கு முந்தைய மேடை நாடகங்களிலும் நிறைய வசனங்களை மேடையில் உணர்ச்சியுடன் பேசினார்கள். இன்றுள்ள நாடகங்களில் அது இருக்கிறதா என்ற கேள்வி சிலரால் முன்வைக்கப்படுவதுண்டு. ஒவ்வொரு கலையும் அதன் காலகட்டத்திற்கு ஏற்ப மாறினாலே அது நிலைத்திருக்க முடியும். நாடகத்தில் நிகழ்ந்துள்ள மாற்றமும் அத்தகையதே என்பதை புரிய வைக்கும் அசல் அரங்கப்பிரதியாக சிகப்புக் கண்ணாடி இருக்கிறது.
காகிதம், எழுதுகோல்கள், தூரிகைகள் கொண்டு வரையப்பட்ட ஓவியங்களிலிருந்து மாறி இப்போது எண்மத் தொடுதிரை செயலிகளிலும் கணினிகளிலும் வரையும் அளவிற்கு ஓவியத்துறை மாறிவிட்டது. இவை அனைத்தையும் சமாந்தரமாக வைத்து நாடகத்தோடு ஒன்றிப் பார்க்க வேண்டும். இப்படியான நாடகங்கள் பிரதியாக கைக்கு வரும்போது மற்றொரு பரிணாமம் பெறுகிறது. நாடகம் குறித்த புரிதலை அதிகப்படுத்துகிறது. சிகப்புக் கண்ணாடி போன்ற நூல்களை நாடகத்தைப் பார்த்ததற்குப் பின் வாசித்தால் அது பலவிதமான பார்வைகளுக்குரிய வெளியைத் திறக்கக்கூடும்.
கோமாளிகளின் விடுதி நாடகத்தில் வரும் கோமாளிகள் யார்? என்பதை அனுமானித்து அதன் வழி வாசிக்கலாம் என்று முடிவு செய்தேன். ஒரு அரங்க நாடகத்தை வாசிக்கும்போது முந்திய அனுபவங்கள் பயனளிக்கும் அம்சமாக உடன் நிற்கும் என்ற எண்ணமே இந்நூலை வாசிக்க எடுக்கும்போது முன் நின்றது. அரங்கத்தில் நிகழ்த்தப்பட்ட புகைப்படங்களும் நூலில் அச்சாகியிருக்கிறது என்றாலும் கூட கோமாளிகளை நாம் இதற்கு முன் பார்த்திருந்தால் அது இந்த நாடகத்தை வாசிக்கும்போது அதிகளவில் உள் நெருங்கிச் செல்லும் வாய்ப்பாக அமையுமென கருதிக் கொண்டேன். சர்க்கஸ் கூடாரங்களை பகல் நேரங்களில் பார்த்த அனுபவம் எனக்கு உண்டு. சிறு வயதில் சர்க்கஸ் பார்க்கப் போவதோடு அந்தக் கலைஞர்கள் கூடாரத்தை விட்டு வெளியில் எப்படி இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கவும் ஆர்வம் இருந்தது. அந்த சம்பவங்களை எல்லாம் அசைபோட்டு அதன் வழியே இந்த நாடகத்திற்கு முன் வந்தேன். இப்படியாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம் இருக்கலாம். சிலர் தெருக்கூத்தில் வரும் கோமாளி பாத்திரங்களையோ மேடை நாடகங்களில் வரும் நகைச்சுவை பாத்திரங்களான சார்லி சாப்ளின் போன்ற ஜோக்கர் வேட பாத்திரங்களையோ வைத்து இந்நாடகத்திற்குள் நுழையலாம். ஆனால், அதில் அவர்கள் மேடையில் தோன்றும் கலைஞர்களாக மட்டுமல்லாது நாடகத்தின் மையமாக அவர்களது வாழ்நிலையும் செயல்பாடுகளும் தான் என்கிற உணர்வையும் உடன் வைத்துக்கொள்ள வேண்டும். சிறை போன்ற கூண்டு வாழ்க்கையில் அடைபட்டுக் கிடக்கும் கலைஞர்கள் தங்களை வெளிப்படுத்தும்போது பார்வையாளர்களுக்குள் இருக்கும் சிரிப்பையும் அதன்வழியிலான இன்ப அனுபவத்தையும் ஒருசேர வெளி கொண்டு வருகின்றனர். பார்வையாளர்கள் தாங்கள் பெற்ற அனுபவத்தோடு திரும்ப கோமாளிகள் மீண்டுமாக கூண்டுக்குள் அடைபடுகின்றனர். அன்றாடச் சுழற்சிக்குள் சிக்குகின்றனர்.
இந்நாடகத்தினை வாசிக்கும்போது ஒவ்வொரு வரிகளிலும் புரிதலுக்கென வைத்திருந்த முன் நினைவுக் காட்சிகளில் உடைதல் ஏற்பட்டு புதிய அரங்கமும் இதுவரை அறிந்திராத கோமாளிகளும் கண்முன் விரிந்து அவர்களது வேண்டுகோள்களையும் ஏக்கங்களையும் கொட்டுகின்றனர். உறைதலும் இயக்கமுமாக நாடகம் முடிந்தபின் நமக்குள் இருக்கும் பழைய நினைவுகளை நாடகத்துடன் பொருத்திப் பார்க்கலாம். (பொருத்திப் பார்த்தல் அவரவர் அனுபவம் பொறுத்ததாகும். இது ஒரு வகை வாசிப்பு முறை.) கோமாளிகளின் விடுதி நாடகத்தில் கோமாளியில் அடைபட்டிருக்கும் இரண்டு கூறுகளாக முகமூடியும் மாய வித்தையும் இருப்பதை நாடகம் உணர்த்துகிறது. மேலும், இப்பிரதியிலுள்ள எல்லா நாடகங்களுக்கும் ஒலி முக்கியப் புலனாகக் காணப்படுவதை நாடக விவரிப்பில் அறியலாம். ஒவ்வொரு நாடகத்திலும் வரும் ஒலிகளை வைத்து மட்டுமே தனியே பேசுவதற்குரிய அளவில் செய்திகள் இருக்கின்றன.
பாழ் நகரத்துப் பிரதி என்ற நாடகம் அகம் மற்றும் புற வறுமைகளுக்குரிய இயந்திரத்தன்மையும் இருத்தலற்ற மன அலைச்சலுடன் கூடிய நான்கு பாதைகளைப் பற்றி பேசும் நாடகம். இந்நாடகத்தினை வாசிக்கும் போது, பூமியின் ஏதோவொரு பகுதியில் ஒரு துளை இருப்பதாகவும் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதி வரை செல்லும் இரண்டு நிலங்களையும் துளைக்குமாறு நீண்ட துளை என்றும், அந்தத் துளைக்குள் மனித ஓலங்கள் கேட்கும் என்று எவரோ முன்னர் சொன்ன செய்தியே மனக்கண் முன் விரிந்தது.
வரிசையில் நின்று தற்கொலை செய்யக் காத்திருப்பவர்கள் பற்றிய பகுதி கொலைக்களம். அவர்கள் கடிகாரம், எழுதுபவன், பார்ப்பவன், தற்கொலைக்குட்படுபவன், தற்கொலைக்காக வரிசையில் காத்திருப்பவன் என்று இந்நாடகம் அமைகிறது. மேசையில் உட்கார்ந்து எழுதுபவன் யார்? ஏன் எழுத்து என்கிற செயல்பாடு மற்ற செயல்பாடுகளுக்கு பதிலாக இந்தப் பகுதியில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. எழுதுபவனை இக்காட்சியில் இடம்பெறும் பிறர் எப்படிப் பார்க்கிறார்கள், எழுதியவன் மனப்பூர்வமாக தான் எழுத நினைத்ததை எழுதி முடித்துவிட்டானா? இந்நாடகத்தில் முதலில் திட்டமிட்டபடி சாவை அடைபவர் யார்? என்ற பல கேள்விகளுக்குரிய பதில்களாக காட்சிகள் விரிகின்றன.
கொலைக்களத்திற்கு அடுத்தப் பகுதி ஆவணக் காப்பகம், தரவுகளை மட்டுமே சட்டமாகக் கொண்டு அவ்வழியில் ஈடேறும் செயல்பாடுகளை நிர்பந்திக்கும் பகுதி. கடிகாரத்திற்குப் பதிலாக இங்கு தாயக்கட்டை ஒலி கேட்கிறது. தாயக்கட்டை ஒலியுடன் கோப்புகளும் இந்தப் பகுதிகளில் மனிதர்களை ஆட்டுவிக்கின்றன. காயடித்தல் பகுதியில் வயலின் இசை வருகிறது. பின் வெண்கல ஓசை டமார ஒலிகளுக்கு நடுவே கவசம் ஒன்றும் ரம்பம் ஒன்றும் வருகிறது.
சீட்டாட்டப் பயிற்சி பகுதியைப் படிக்கும் போது நாடகத்தைப் பார்க்க வேண்டும் என தோன்றும் வகையிலான மொழியை கோபி பயன்படுத்தியுள்ளார். இந்நூலில் “நிராகரிப்பு” நாவலில் வரும் ஒரு பகுதியை காட்சிப்படுத்தியிருக்கிறார். ஒரு இலக்கிய ஆசிரியரும் நாடக ஆசிரியரும் இணையும் இடத்தில் நிகழும் கலைத்துவம் கூடிய இடமாக அவ்விடத்தைப் பார்க்கலாம். இன்று பல்வேறு சிறுகதைகள் நாடகங்களாக நடிக்கப்பட்டுக் கொண்டு வருகின்றன. அது ஒருவகையிலான வெளிப்பாட்டு முறை. ஒரு நாவலின் அல்லது சிறுகதையின் கவிதையின் குறைந்தபட்ச சொற்களை காட்சியாகப் பார்க்க வேண்டும் என்கிற எண்ணத்தை அனைவரும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அடைவர். பல்வேறு நாடகங்களில் இப்படியான முறை பயன்படுத்தப்படுவதும் உண்டு. கோபி இங்கு “நிராகரிப்பு” நாவலில் காஃப்கா குறிப்பிடும் சம்பவத்தைப் பிரதியில் குறிப்பிட்டுள்ளார். ஒடுக்கப்படுதலைத் தொடர்ந்து வரும் விரக்தி, இருத்தலற்ற சூழலைக் கையாளுதல் என்று பாழ் நகரத்துப் பிரதி முழு நாடகமாக பரிணமித்துள்ளது.
நான் வளர்மதி நாடகம் பின்னோக்கிச் சென்று முன் நடந்த சம்பவங்களை எல்லாம் அசைபோட வைக்கும் நாடகமாக எனக்குப்படுகிறது. இந்த நாடகத்தில் ஈழப் போராட்டம், யாழ்ப்பாண நூலக எரிப்பு போன்ற சம்பவங்களோடு போராளிகள் இணையர்களாக இருந்தால் அவர்களது இழப்பும் லேசாக இழையோடுகிறது. இறப்புச் சான்றிதழைத் தயார் செய்து வைத்துவிட்டு அந்தத் தேதியில் கொலை நிகழ்த்தும் சம்பவம் திரைப்படத்தில் வரும் பத்திரிக்கைக்கு செய்தி கொடுத்துவிட்டு அதை செய்தியாக்குவதற்குப் போராடும் அரசியல்வாதிகள், அதிகாரிகள், காவல்துறையினர் பற்றிய காட்சிகளை நினைவுக்கு கொண்டு வருகிறது. இந்த நாடகத்தின் பல்வேறு பகுதிகளை புரிதலுக்காக திரைப்படத்தோடு இணைத்துச் சொல்வது வசதியாக இருக்கும் என கருதுகிறேன். விடுதலை 2 மற்றும் சமீபத்தில் வெளியான தங்கலான் மற்றும் விடுதலை 1, 2 ஆகிய படங்களின் காட்சிகளோடு இந்நாடகத்தின் சம்பவங்களை பொருத்திப் பார்க்கும்போது அதன் பின்னணியை ஓரளவு உள்வாங்கிக் கொள்ள முடியும்.
அறுபட்ட புத்தர் தலையும் இயேசுவை சிலுவையில் இடச்சொல்லி கையைக் கழுவிய பிலாத்துவும் இங்கு நேர் மற்றும் எதிர்நிலை வெளிப்பாட்டு முறைகளில் நாடகத்திற்குள் வருகின்றனர். “சமாதானத்தின் கைகளில் வைத்துக் கொள்ளப்பட்ட எல்லா முகமற்ற ஆன்மாக்களின் வேதனையையும் நம்மிடம் பெற்று நம்மிடத்தை பறித்துக் கொண்டிருக்கும் உலக நீதிபதிகள் சுமக்கட்டும்” என்ற வரிகளில் பிலாத்துவோடு எதிர்நிலை வெளிப்பாட்டில் பொருத்தலாம். வெடிகுண்டு சத்தமும் கடிகார முள் நகர்வும் தான் இந்நாடகத்தின் முக்கிய ஓசைகள்.
ஓரிடத்தில் விடுதலை 2 படத்தில் கணவன், மனைவி உரையாடும் பகுதி நினைவுக்கு வந்தது. இப்படியாக போராட்டம், பலி, தொன்மம், இரையாதல் போன்றவற்றின் பதிவுகளாக “நான் வளர்மதி” இருக்கிறது. ஒரு பக்கம் கல்யாணம், அப்போதே வெடிகுண்டு வீசப்படுதல், சாவு என்ற ஈழ வாழ்க்கையின் சித்திரத்தை நவீன முறையில் கடத்துகிறது நான் வளர்மதி.
கதை கூறல் முறையில் வரும் நாடகம் “நான் சாவித்திரிபாயைப் படிக்கிறேன்”. கல்வியின் அவசியத்தைப் பேசும் இந்நாடகத்தில் மாணவி எழுதிய கட்டுரை முக்கியமான பகுதி. அப்பகுதியை ஆசிரியர்கள் வாசிக்கும் போது பெருத்த ஆனந்தத்திற்கு உள்ளாகுவர். தன் மாணவரின் அறிவுக்கூர்மையை நேரில் பார்ப்பதே ஆசிரியரின் வாழ்நாள் சாதனை. அது இந்நாடகத்தில் பொருத்தப்பாட்டோடு வெளிப்பட்டுள்ளது. ஜோதிராவ் பூலே, சாவித்திரிபாய் பூலே ஆகியோர் ஒத்த சிந்தனையும் வலியும் கொண்டவர்களாக கல்வி, மருத்துவம் உள்ளிட்ட சீர்திருத்த நடவடிக்கைகளில் செயல்பட்ட வரலாற்றையும் சமூகத்தின் விதிகளிலிருந்து திரும்பிப் புதிய பாதையைப் போட்டுக் கொண்ட துணிச்சலையும் பேசுகிறது. குழந்தை பிறப்பது தொடர்பான சாவித்திரிபாய், ஜோதிபாய் விருப்பம் நாமக்கல் கவிஞர் வாழ்விலும் நடந்திருக்கிறது. ஜோதிபாய் சொன்ன வார்த்தை நாமக்கல் கவிஞரின் வாயிலிருந்தும் வெளிப்பட்டிருக்கிறது. இன்று எத்தனையோ ஆண்கள் அதனைச் சொல்வதையும் கேட்க முடிகிறது. இதற்கெல்லாம் ஆரம்பப்புள்ளி ஜோதிபாய் பூலே. 1977ஆம் ஆண்டு பஞ்சம், 1897ஆம் ஆண்டு ப்ளேக் நோய் காலகட்டத்தில் சாவித்திரிபாய் எடுத்த துணிச்சலான முடிவுகள் கல்வி அவருக்கு கொடுத்த சிறப்பு என்பதையெல்லாம் இந்நாடகம் எளிய முறையில் பதிவு செய்கிறது. இந்நாடகத்தில் நரம்பிசைக் கருவி பயன்படுத்தப்பட்டுள்ளது
சிகப்புக் கண்ணாடி நாடகம் பெண்களின் குரலாக அடக்குமுறைக்கு எதிரான ஓங்கிய எதிர்ப்பு மனநிலையாக வெளிப்படுகிறது. இந்நாடகம் வயலின் இசையில் தொடங்குகிறது. இசையைக் காட்டிலும் ஒளிக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அரங்கப் பிரதி அமைந்துள்ளது. தொடர்ந்து புராணம் தொடங்கி சமகாலம்வரை பெண்களைப் பேசவிடாது அவர்களுக்காக சேர்த்துப் பேசும் ஆண்கள் எந்த வகையில் தங்களுக்கு நீதி கொடுக்க முடியும் என்ற தர்க்கத்தை எழுப்பும் இந்நாடகத்தில் பஞ்சபாண்டவர்களும் கிருஷ்ணனும் கேள்விக்குள்ளாகின்றனர்.
உடை என்பது என்ன என்பதையும் பெண்மையப் பார்வையிலிருந்து வெளிப்படுத்துகிறது. பெண்களுக்கு அளிக்கப்படும் தண்டனைகள் குறித்து சிறிய பகுதியை “நான் வளர்மதி” நாடகத்தில் பார்க்க முடிந்தாலும் இந்த நாடகம் சற்று விவரணை உடையதாக வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. பெண்குறியைச் சிதைத்து தண்டனை கொடுக்கும் கொடூரத்தோடு பலவிதமான ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் பெண் உடல் தன்னிடமிருந்து கொட்டும் சிகப்பு ரத்தத்தையே வைத்து உருவாக்கப்பட்ட சிகப்புக் கண்ணாடியில் வந்து நிற்கிறது. இந்தக் கண்ணாடிக் குறியீடு தனது பிம்பம் தானே என்பதை உணர்த்தி தன் வலிக்குத் தானே குரல் கொடுக்க முடியும் என தனக்குத் தானே சொல்லிக் கொள்ளும் பாங்கில் நிற்கிறது.
அபகரிக்க நினைக்கும் பெண் உடல் பற்றிய பகுதிகள் நிலத்திற்கு ஒப்புமைபடுத்தப்பட்டு இயற்கைக்குப் போகிறது. இயற்கையில் ஆங்காங்கே கைவைத்தால் கேட்பதற்கு யார் இருக்கிறார் என்ற மனநிலையோடு திரியும் விட்டத்தியான மனப்பாங்கு பெண் உடல் மீது செலுத்துவதைக் குறிக்கும் பகுதியாக அது மாறுகிறது. இப்படிப் பல்வேறு கனமான உள்ளடக்கங்களைக் கொண்டு கலைத்துவத்துடன் உருவான பிரதியாக சிகப்புக் கண்ணாடி உள்ளது.
அதிநவீனக் கழிப்பறை நாடகம் எளிமையாக செய்ய வேண்டிய பணிகள் நவீனம் என்ற பெயரில் அலைக்கழிப்புக்குள்ளாக்குவதை மையமிட்டு எழுந்துள்ளது. இப்படியாக செய்தால் வேலைவாய்ப்பை ஏற்படுத்தலாம் என்று நினைக்கும் திட்டங்கள் இறுதியில் வேலைவாய்ப்புக்கு இடம் தராமல் போவதை இந்நாடகம் உணர்த்துகிறது. அரசு உருவாக்கும் வேலை வாய்ப்புகளின் தன்மையை இந்த நாடகம் அரங்கிற்கு கொண்டு வந்துள்ளது. தன்னியல்பாக எளிமையாகச் செய்ய நினைப்பதைச் சுற்றி வளைக்கும் உத்தியால் பயன்பெறுவது யார்? என்ற அழுத்தமான கேள்வியும் இந்நாடகத்திற்குள் உள்ளொடுங்கி கிடக்கிறது.
அடக்கப்படுதலுக்கு உள்ளானவர்கள் அதிலிருந்து மீள தத்தளிப்பதும் தத்தளித்து மேல் எழுவதற்கு சில திட்டங்களை பயன்படுத்துவதுமாக கழுமரம் இருக்கிறது. கழுமரம் போன்ற நாடகங்கள் பார்ப்பதற்கு ஏதுவானவை. அவற்றின் நாடகப் பிரதி உணர்த்துவதும் அதையே தான். தொடர்ந்து வரும் அசைவுகளும் சமிக்ஞைகளும் பிற நாடகங்களைக் காட்டிலும் கழுமரம் நாடகத்தில் அதிகமாக இருப்பதாகத் தோன்றுகிறது. உரையாடலற்ற பேச்சற்ற சமிக்ஞை நாடகமாக கழுமரம் இருக்க காணலாம். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ஞா. கோபியின் இந்த நூல் நாடகத்துறையில் குறிப்படத்தகுந்த முக்கிய அரங்கப் பிரதி எனச் சொல்லத் தகுதி வாய்ந்த நூலாக இருக்கிறது. செ.ரவீந்திரன் இந்நூலுக்கு கொடுத்துள்ள அணிந்துரை வாயிலாக நாடகம் நிகழ்த்தப்பட்ட கால செய்திகளையும் அறிந்து கொள்ள முடிகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக