தொல்குடித் தொடர்பும் நவீன வீச்சும் (குமார் அம்பாயிரத்தின் "ஈட்டி" சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து) -அழகுராஜ் ராமமூர்த்தி
தொல்குடித் தொடர்பும் நவீன வீச்சும்
(குமார் அம்பாயிரத்தின் "ஈட்டி" சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து)
-அழகுராஜ் ராமமூர்த்தி
2022ல் வாங்கிய ஈட்டி சிறுகதைத் தொகுப்பை 2023ல் கருங்குருவி கவிதைகள் கவிதை தொகுப்பு தனிமைவெளி வெளியீடாக வரும் அறிவிப்பை தோழர் பாலைநிலவன் வெளியிட்டதை தொடர்ந்து வாசித்தேன். வாங்கிய பின் ஒரு வருடம் கழித்து இத்தொகுப்பை வாசிப்பதற்கு காரணம் உண்டு. பலமுறை வாசிக்க வேண்டும் என கையில் எடுக்கும் போதெல்லாம் தமிழ்வெளி பதிப்பகத்தின் முகப்பு படத்தைப் பார்த்துவிட்டு வைத்து விடுவேன். இது பொறுமையாக வாசிக்க வேண்டிய தொகுப்பு என்பதை அப்படம் சொன்னது. A. செல்வம் என்பவர் வரைந்த படம் அது. ஈட்டி கதை தொகுப்புக்கு ஏற்ற வகையில் அப்படம் பொருந்தி நிற்பதை கதைகளை வாசித்து முடிக்கையில் உணர்ந்தேன்.
ஈட்டி தொகுப்பு பற்றிய இப்பதிவிற்குள் செல்லும் முன் குமார் அம்பாயிரத்தின் வாழ்க்கையைப் பற்றிய சில செய்திகளை அறிவது பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் அவரது வாழ்க்கைப்போக்கின் வாடைகள் வார்த்தைகளாகி கதைகளாக விரிவடைந்துள்ளன என்பதை ஈட்டி கதைத்தொகுப்பின் மூலம் அறியலாம். குமார் அம்பாயிரம் குறித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் தேடும்போதும் வாசிக்கும்போதும் அவரது சில செயல்பாடுகள் என்னைக் கவர்ந்தன. அதில் அவருடைய இயற்கை சார்ந்த செயல்பாடும் ஒன்று. வேதியியலில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்ளும் நண்பர் ஜெயபிரகாஷ் பற்றிய நினைவு குமார் அம்பாயிரத்தின் இயற்கைச் செயல்பாடுகளைக் குறித்து அறிந்து கொள்ளும்போது நினைவிற்கு வந்தன. இயற்கை மீது அதிக அக்கறையும் ஆர்வமுமிருந்தும் வேதியியலில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளும் முரணான வாழ்வு ஜெயப்பிரகாஷுடையது. ஆனால் குமார் அம்பாயிரம் தொடர்ந்து சூழலியலில் கவனமுடைய செயல்பாட்டாளராக தன்னை வடிவமைத்துக் கொண்டவர். “பெர்மா கல்ச்சர்” என்ற நிரந்தர இயற்கை வேளாண்முறையை இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருடைய வழிகாட்டலின்படி தமிழ்நாடு முழுவதும் பரவலாக்கும் முயற்சியும் பயணமும் அவருடைய வாழ்வின் ஒரு பக்கம்.
என்னைக் கவர்ந்த மற்றுமொரு முக்கியமான இடம் டிட்ஜிட்ரூ இசைக்கருவி. இது ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் பழமையான இசைக்கருவி. இதன் ஒலியை நவீன நாடகங்களில் குமார் அம்பாயிரம் பயன்படுத்தியிருக்கிறார். அந்நாடக நிகழ்வினை ஒரு முறை நேரில் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்ததுண்டு. இவ்விசைக் கருவியை முதன் முதலில் ஹம்பியில் தான் அவர் பார்த்திருக்கிறார். சுதந்திரச் சிந்தனையில் செயல்படும் விஜய் ஐயப்பன் அண்ணன் முதலானவர்கள் பல வருடமாக ஹம்பியைக் குறித்துப் பேச கேட்டிருக்கிறேன். இத்தகவலை அறிந்த பின் ஹம்பிக்கு ஒருமுறையேனும் போய் வர வேண்டும் அங்குள்ள சூழலை உள்வாங்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் எழுந்தது. அது இந்த 2025ஆம் ஆண்டில் நிறைவேறியது. எனினும் கூட மீண்டும் ஒருமுறை கூட்டமாக அல்லாமல் குறிப்பிட்ட நபர்களோடு சென்று வர வேண்டும் என்ற விருப்பமும் உண்டு.
டிட்ஜிட்ரூ இசைக்கருவி ஆஸ்திரேலியக் காடுகளிலுள்ள வண்டு துளைத்த யூகலிப்டஸ் மரங்களை வெட்டியெடுத்து வண்ணம் தீட்டி உருவாக்கப்படுகிறது. இந்த உருவாக்க முறை குமார் அம்பாயிரம் கதைகளுக்கும் பொருந்தும். அவரது கதைகள் இயற்கைப் பொருட்கள் மீதும் இயல்பான நடவடிக்கைகள் மற்றும் நாட்டுப்புற நம்பிக்கைகளுடனான செயல்பாடுகள் மீதும் மாயத்துவ வண்ணத்தைத் தீட்டிய ஓவியங்களாக இருப்பதை ஈட்டி சிறுகதைத் தொகுப்பை வாசிப்பதன் மூலம் அறியலாம்.
மாய எதார்த்த எழுத்து முறையில் காட்சி குறித்த விவரிப்பும் உள் சென்று ஒப்புநிலையில் நோக்கி படிமத்தைக் கொண்டு வந்து நிறுத்துவதும் முக்கியமான உத்தி. அதனைத் தொகுப்பின் முதல் (ன்யாக்)கதையின் முதல் பத்தியில் புறாக்களையும் அதன் விழிகளையும் மரணத்தையும் கூறும் இடத்தில் குமார் அம்பாயிரம் கையாண்டிருக்கிறார். இக்கதையில் “உறுதியாகவும் நம்பிக்கையின்றியும் நம்பினார்” என்ற தொடர் வருகிறது. இத்தொடருக்குள் உறுதிக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான வேறுபாடும் தொடர்பும் ஒற்றைச் சொல்லாடலுக்குள் வந்திருக்கிறது. எழுத்தாளர்களின் இலக்கிய எழுதியல் முறைமைக்கு இச்சொல்லாடலை எடுத்துக்காட்டாக சொல்லலாம். கதைகளுக்குள் நுண்மையையும் கூர்மையையும் உடைய தொடர்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதற்கு இதனையொரு சான்றாகக் கொள்ளலாம்.
தேநீர் கடை மற்றும் கிழவன் பற்றிய விவரணை இக்கதையின் கவனிக்கத்தக்க பகுதி. இதில் கதைசொல்லி குறிப்பிடும் கிழவன் சிறுவயதில் நான் பார்த்த பஞ்சுமிட்டாய் கிழவரை நினைவுபடுத்துவதாக இருந்தார். அவர் கல்போன்று தடிமனும் கனமுமான கூம்பு வடிவ வெள்ளை நிறத் தொப்பியை எப்போதும் தலையில் சுமந்திருப்பார். அதை அவர் எங்கு வாங்கினார் என்ற கேள்வி எப்போதும் இருக்கும். ஒருமுறை கேட்டபோது ஏதோ ஒரு வடமாநிலத்தின் பெயரைச் சொன்னார். இப்படியான கிழவர்களும் கிழவிகளும் தொடர்ந்து தமிழ் சிறுகதைக்குள் வலம் வருவது குறிப்பிடத்தக்கது. இக்கதையில் கிழவன் குறியீட்டுச் சொல்லை ன்யாக் என கதைசொல்லிக்கு சொல்கிறான். இந்த முறை இயல்பாக நாட்டுப்புற மரத்தடி விவாதங்களில் நிகழக்கூடியது. அது தக்கமுறையில் இக்கதையில் பொருத்தப்பட்டுள்ளது.
ஆவி பற்றிய கிழவர் அறிமுகப்படுத்தும் முன் கதை சொல்லி 'விபத்து நிகழ்த்தப்பட்டது போல் இருக்கிறது" எனச் சொல்லும் இடமும் அதற்கு முந்தைய பகுதியும் யாரோ ஒரு பணம் படைத்த முதலாளி தான் அதற்கு காரணமாக கதைக்குள் இருப்பான் என்ற இயல்பான எண்ணத்தை எழுப்பி சட்டென ஆவி என்ற சொல்லில் கதையோட்டத்தை மாற்றுகிறது. இதில் ஆவிகளைப் பார்க்கும் கரும்பலகை முயற்சி சிறுவயதில் பார்த்த OUIJA BOARD படத்தை நினைவுபடுத்தியது. மேலும் கவனம் மற்றும் கவனமின்மை, ஆசை, ஆன்மா பற்றிய வரையறை முதலானவை தத்துவார்த்த நிலையில் நின்று நோக்கத்தக்கவையாக இக்கதைக்குள் இடம்பெற்றுள்ளன.
பெண் ஆவியுடனான உரையாடலில் கதைசொல்லி காட்டும் நெருக்கத்தை காதலில் தோல்வி கண்ட ஆண் மற்றும் பெண் என்ற இரு பால் எதிர்நிலைகள் தங்களுக்குள் காட்டும் நெருக்கமாகப் பார்க்கலாம். இதனை உள பகுப்பாய்வு முறை மூலம் விரிவாகப் பேசுவதற்குரிய வெளியை இக்கதை கொண்டுள்ளது. நினைவு என்பதன் குறியீட்டுப்பொருளாக ஆன்மாவைக் கொள்ளலாம். அதன்வழி மாயத்திலிருந்து விலகி இக்கதையை அன்றாட வாழ்வில் குழம்பித் திரியும் மனிதனின் நினைவாட்டத்தை நெருங்கிப் புரிந்து கொள்ள முடியும். இறப்பு சடங்கு குறித்த நம்பிக்கையை புறாக்களின் மரணத்தை வைத்து குமார் அம்பாயிரம் இக்கதையில் நிலைநிறுத்த எண்ணியிருப்பதாகத் தெரிகிறது. இந்நிலைநிறுத்தல் மறைமுகமாக மாற்றமற்ற மனிதமனத்தின் தனிநிலை உள்தேடலாக எடுத்துக்கொள்ளத்தக்கது.
மூக்சதை, கல்பசறை, கோலிக் கொண்டை என புறாக்களின் வகைகள் சுட்டப்பட்டுள்ளது. இது குமார் அம்பாயிரம் இயற்கைப் பொருட்களை தனது படைப்புகளில் தொடர்ச்சியாக பதிவு செய்யும் முறையிலானது.
“பனம்பூல் ஏந்திய தனிப்பாடல்” கதையை முக்கியமான சிறுகதை முயற்சியாகக் கொள்ளலாம். சில இடங்களில் தொய்விருப்பது போன்றும் வரலாற்றையொட்டிய நிகழ்வுகளையும் கற்பனையையும் பொருத்துவதில் விலகலிருப்பதாகத் தெரிந்தாலும்கூட இக்கதை அதன் உள்ளடக்கச் செய்திகளாலும் கூறும் முறையிலும் முக்கியமான கதை. மனிதன் தான் பயன்படுத்தும் பொருளும் கருவிகளும் வளர்ப்பு மிருகங்களும் பிறரது பொருள், கருவி, வளர்ப்பு மிருகங்களைவிட பலம் குறைந்தும் மலுங்கியும் இருப்பதைக் கண்டு இயல்பாக அடையும் மனத் துவள்ச்சி இக்கதையில் வரும் கதை சொல்லிக்கு உண்டு. அதனை “அந்தகாரமோர் கண்ணாடிப் பந்து” என்ற படிமத்துவ வரியோடு பொருத்தலாம். அப்படிமத்தை நினைவில் கொண்டே கதையை வாசிக்கும் முறையை இக்கதை வாசிப்பில் கையாண்டேன். அது இக்கதையின் எழுச்சி, வீழ்ச்சி, முடிவு ஆகிய பகுதிகளோடு ஒன்றிப்போயின.
நாணயப்புழக்கம், வரிமுறை, பலா மரம் மற்றும விலங்குகளின் தோலில் எழுத்தைப் பொறித்தல், கள்ள நாணயங்கள், காக்காவை வெள்ளி நாணயம் கொண்டு செல்லும் தூதாகப் பயன்படுத்துதல், கள் என வரலாற்றுப் புனைவாக்கத்தை இக்கதை தனக்குள் கொண்டுள்ளது. கார்ப்பரேட் நிறுவனம், ஆளெடுப்பு முறை, வழங்கப்படும் சலுகைகள், சக்கையாய்ப் பிழிந்துவிட்டு சலுகைகளைத் திரும்பப்பெறும் நடைமுறை என பலவற்றை குறியீடுகளைக் கொண்டு குமார் அம்பாயிரம் பகடி செய்துள்ளார். அவரது இத்தகைய பகடிக்குள் ஆழமான மாற்றமடையும் வரலாற்றுப் போக்கும் உள்ளூர்ந்திருக்கிறது. கள், பனம்பூல் போன்றவை வரும் இடங்களில் நாட்டார் வழக்காற்றுப் பழமொழிகள் உரையாடலுடன் இடம்பெற்றுள்ளன. இதில் கள் பற்றிய அரசியல் நுணுக்கமாக கிளைக்கதையினை ஆதாரமாகக் கொண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. வீனஸ் என்ற பெட்டைக் கழுதை தான் முக்கியமான மாயத்திற்குரிய சோதனைக் கருவியாக கதைக்குள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
ஓணான் பிடித்தல், காட்டுமுயல், குறவை மீன், செம்போத்து, பன்றி முதலானவற்றை உவமைகளாக இக்கதை கொண்டுள்ளது. மேலும் பனை விதை வரும் பகுதிகளும் முக்கியமானவை. இவையெல்லாம் குமார் அம்பாயிரத்தின் இயற்கையைப் பதிவு செய்யும் முறையிலான எழுத்து முறைக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
“ஃ என்றொரு கதை” க.நா.சு மொழிபெயர்த்த நட் ஹாம்சன் எழுதிய "நிலவளம்" நாவலை நினைவுபடுத்தக்கூடிய பகுதிகளை உள்ளடக்கியிருந்தது. கதையில் ஆடுகள், மாடுகள், நாய்கள், பூனைகள், மான்கள், பாம்புகள் மற்றும் நாய் வகைகளா கோம்பை, சிப்பிப்பாறை கன்னி, ராஜபாளையம் போன்றவையும் புஸ்ஸி, டாபர்மேன் போன்ற வெளிநாட்டு நாய் வகைகளும் குறிப்பிடப்படுகின்றன. பறவைகளில் மணிப்புறாவும் வெள்ளை மயிலும் வருகின்றன. மைசூர் மாடு, ஜெர்சி மாடு, நாட்டு மாடு ஆகியவற்றுக்கிடையிலான வேறுபாடுகளைப் பேசுவதோடு வெளிநாடு மற்றும் மோஸ்தர் பிராணிகள் மீதான அக்கறையின்மையையும் ஈடுபாட்டின்மையையும் கதை முன் வைக்கிறது. இதன் வழி நாட்டு விலங்கினங்கள் மீதான எழுத்தாளரின் பார்வை வெளிப்படுகிறதெனலாம். இதில் உன்னி பிடுங்கும் செயல் முதலானவை கால்தடை விலங்கு வளர்ப்பு செயல் முறையை நெருக்கமாகப் பதிவு செய்யும் வகையில் இடம்பெற்றிருக்கின்றன. ஒரு பண்ணையில் வேலையாட்களை முதாலளி அடிப்பதை எதன் அடிப்படையில் நடைமுறையாகக் கொண்டுள்ளான் என்பதும் வேலையாளின் மகள் மீது ஆர்வம் கொண்டு கலப்பதுமான செய்திகளும் இக்கதையின் துணைப் பகுதிகளாகும்.
கன்றை ஈன்றுவிட்டு இறந்த மாட்டிற்குப் பதிலாக புது மாட்டை இறக்கி அதற்கு சாரயம் புகட்டிப் போதையில் உயிர்த் துவாரத்தை நோண்டிக் குருதியையும் கர்ப்பநீரையும் எடுத்து கன்றுமீது பூசி அவ்விரண்டையும் தாய் சேயாக்கும் கொடூரமான நடைமுறையை இக்கதைப் பேசுகிறது. மரபின் மீதான நம்பிக்கை, கலப்பின் மீதான வெறுப்பு, பண்ணையாட்களை அடிமை மனோபாவத்தில் அடித்தல் போன்ற பகுதிகளை முற்போக்கு நோக்கிலும் சூழலியல் நோக்கிலும் அணுகி இருவேறு பார்வைகளைப் பெறுவதற்கான வெளி இக்கதைக்குள் திறந்துள்ளது. காமம் சார்ந்த உரையாடலும் துயரத்திற்குப் பழகுதலுமான மற்றுமோர் பார்வையை இக்கதையில் வரும் பெண்ணை முதன்மைப்படுத்தி அணுக முடியும். இக்கதையின் கடைசிப் பகுதிகளில் வரும் ராஜ்ஜியம், தோட்டம் போன்றவை விவிலியத்தின் தொன்மப் பகுதிகளோடும் தொடர்புடையதாக இருக்கின்றன.
“ஈட்டி” கதை பயணத்திற்குச் செல்லும் இரண்டு நண்பர்களைப் பற்றிய கதை. இதில் பயணத்தின் வழியில் பழங்களை உணவாகக் கொள்வது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் பணம் தொலைதூர பயணத்தில் எப்படியானதாக இருக்கிறது என்பதையும் இக்கதை தொட்டுக் காட்டியுள்ளது. ஒரு மலைவாழ் பழங்குடி கிராமத்திற்கு செல்லும் இருவரை அங்குள்ள “மக்கள் அரச வரவேற்பு கொண்டு வரவேற்கவும் இல்லை. அடிமைகளைப் போல புறக்கணிக்கவும் இல்லை.” என்ற கருத்தை உணர்த்தும் இடம் இக்கதையில் முக்கியமானதாக அமைந்துள்ளது. பன்றி மற்றும் ஆமையின் உடல்கள் உவமைகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. குதிரையை குர்தை என்று சொல்லும் மொழி வழக்கு சென்றுள்ள இடத்தின் பண்பாட்டிற்கு உடன்பட்டு உள்வாங்கும் தன்மையை உணர்த்தும் வகையில் கதைக்குள் அமைகிறது.
குறிஞ்சி நிலத்தில் வரகு உணவுப் பொருளாக இருப்பதை நாம் தொல்காப்பிய உரைகள் மூலம் அறியலாம். இங்கு அதனை குமார் அம்பாயிரம் கதைப்படுத்தியுள்ளார். ஊர் முழுவதும் ஒரே குடியாக இருக்கும் தொல்குடி பண்பாட்டினைச் சென்றுள்ள இடத்தில் இருக்கக்கூடிய ஊரின் இருப்பிட அமைப்பையும் பெண்களை எல்லாம் தாயாரு என்றும் ஆண்களை மூப்பன் என்றும் சொல்லும் சொல்லாடலினை வைத்தும் குறிக்கும் இடங்கள் அமைகின்றன. இது ஆதிப் பொதுவுடைமை சமூகத்தின் நடைமுறையான தொல்குடி வழக்கம். மானிடவியல் நோக்கில் அணுகும் சில கூறுகளை இக்கதை கொண்டிருக்கிறது. சூடு போட்டு நோயினை விரட்டுதல் போன்ற சடங்கு முறைகளைக் கதையில் முக்கியத்துவமுடைய பகுதியாகக் கூறலாம்.
மேலும் ஈட்டி என்பது கனவில் தொலைக்கப்பட்டு சடங்கில் ஒரு மனிதனின் உடலில் இருந்து எடுக்கப்படும் மாய முறையும் சடங்கின் போது வெல்லப்பாகு கொடுத்தல் முதலான உணவு வழக்கமும் நிர்வாணத்தோடு தானிய மற்றும் விதைகளை கொண்டு உடலை மறைத்து பெண்கள் காணப்படுவதுமாக பல்வேறு சடங்குகள் குறித்த செய்திகள் இக்கதையில் இடம் பெற்றுள்ளது. இக்கதையின் இறுதிப் பகுதியில் பயணத்தின் எல்லையை அடைவதற்கும் பயணத்தின் சாட்சியாக மாறுவதற்கும் இடையிலான வேறுபாடு உணர்த்தப்படுகிறது. இரத்த கலப்பு பற்றிய தன்னுடைய பார்வையை முந்தைய கதையில் வெளிப்படுத்தியது போலவே இந்த கதையிலும் குமார் அம்பாயிரம் வெளிப்படுத்தியிருக்கிறார்.
“க்காக்கா” கதை நம்பிக்கை மற்றும் மரபுகளினுள் நின்று அதன் வழியே நவீனத்தைச் சென்றடைதல், மரபிற்கு எதிரான குரலை எழுப்புதல் போன்றவற்றை உள்ளடக்கி அமைகிறது. மரம் எழுப்பும் மொழியை கேட்காததால் விபத்து ஏற்படுகிறது என்கின்ற ஒரு செய்தி ஆரம்பத்தில் சொல்லப்படுகிறது. இது நாட்டார் மரபில் அச்சமூட்டும் கதைகளாக இருக்கின்றன. காக்காக்கள் முன்னோர்களாக இருப்பது பற்றிய கருத்துகள் காக்கா சிலை மற்றும் காக்காவை எதிர்க்கும் ஒருவன் தன் உடலையும் உடலின் புண்களையும் புண்ணின் பக்குகளையும் காக்காக்களுக்கு கொடுத்து காக்காவை தன் வயப்படுத்தக்கூடியவனாக மாறி ஒரு ராஜ்யத்தை படைப்பவனாக மாயத்தினை இக்கதை தன்னுள் நிகழ்த்தியிருக்கிறது. காக்காக்கள் முன்னோர்களாக இருக்கிறார்கள் என்பதற்கான எதிர்ப்புக் குரலை ஒருபுறமும் காக்காக்கள் உணவுச் சங்கிலியில் இடம்பெறும் விதத்தை மற்றொருபுறமும் சொல்லும் இக்கதையில் நவீனமயப்பட்ட கடை விளம்பரங்களும் இறுதியாக வந்து நிற்கின்றன.
இக்கதை நம்பிக்கை சார்ந்து கற்பிக்கப்படும் உணர்வுகள் எப்படி மாறு நிலையில் செல்கிறது என்பதும் குறி சொல்லுதல் என்பது சபித்தலும் வாழ்த்துதலமாக காணப்படுகிறதையும் வேறு சில அடுக்குகளையும் அமைப்பாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. காக்கை, பன்றி போன்றவற்றை வைத்து நன்மை, தீமை குறியீடுகள் எப்படி விலங்கினங்களை மையமிட்டு அமையப்படுகிறது என்கிற சிந்தனையை உருவாக்கும் பகுதிகளும் இக்கதைக்குள் உண்டு. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விளம்பரக் குறியீடுகளாக மாறும் தற்கால வழக்கையும் ஒருசேர கொண்டுள்ளது. இந்தக் கதையின் தொடக்கத்தில் மரத்திற்குப் பின் சென்று நிர்வாணத்தை மறைக்கும் பகுதியை விவிலியத் தொன்மத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
“தேடூ” கதை பண்பாட்டு உருவாக்கத்தில் உள்ள செய்திகளையும் அதே நேரம் தொன்மப் பகுதிகளையும் ஒருங்கே கொண்டு அமைந்திருக்கிறது. இக்கதையில் மாயாவாத தன்மை மேலோங்கி இருப்பதைப் பார்க்கலாம். வறண்ட நிலமும் அதில் வாழும் தேடூ என்ற குருடனுமாக கதை ஆரம்பிக்கிறது. இதில் யானை, வண்டு, சிங்கம், குரங்கு, புலி, நரி, ஆந்தை, காகம் போன்றவை எடுத்துக்காட்டுகளாகவும் மாறுபட்ட நிலைகளில் மாயாவாதத்தால் உரு கொண்டவைகளாகவும் இருக்கின்றன. கண் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்படும் பகுதி கதைக்குள்ள கூறுகளை உள்ளடக்கி வெளிப்பட்டுள்ளது. கிழவன் ஊரார் மூலமாக பாலியல் குறியீடுகளால் ஏளனப்படுத்தப்படுகிறார். பின் கிழவனைக் கண்காணாத இடத்தில் கொண்டு போய் ஊர்வலமாக விடுகின்றனர். மற்றொருபுறம் பேனாக மாறி காணாமல் போகும் சிறுவனும் அச்சிறுவனை தேடி கிழவன் கடப்பாரையாகி கிணற்றுக்குள் செல்வதுமாக கதை முடிகிறது. இக்கதையில் சிந்து சமவெளி நாகரிகம் சொல்லால் நினைவுபடுத்தப்பட்டிருக்கிறது. இது ஒவ்வொரு முறையும் ஒவ்வொருவருடைய வாசிப்புக்கு ஏற்றவாறு வெவ்வேறு தன்மைகளை உணர்த்தக்கூடிய வகையில் அமைக்கப்பட்டிருக்க காணலாம். இக்கதையில் வரும் கிழவன் ஒரு குறியீட்டுப் பொருளாக வாசிப்புக்கேற்ப மாறும் வகையில் அமைக்கப் பெற்றுள்ளார். இருத்தலியல் நோக்கை மாயாவாதத்துடன் கூட்டியதாக இக்கதையைச் சொல்லலாம்.
“மண் யோனி” கதையின் தொடக்கம் “கொட்டுக்காளி” படத்தில் வரக்கூடிய காட்சிகளை நினைவுபடுத்துவதாக இருந்தது இக்கதையில் வரும் காதல் மற்றும் வசிய மருந்து எடுத்தல் போன்றவை அதற்கு காரணம். ஆனால் கதையின் முதல் சில பக்கங்களைக் கடந்தால் கி.ராவின் “நீர் முள்ளு” கதையின் சாயல் தென்பட்டது. ஆண்குறியில் முட்கள் குத்தியதும் பெண்கள் சிறுநீர் கழித்த இடத்தில் மண்யோனி செய்து புணரும் பழக்கமுடையவனும் என்று பகடி தொனிக்கும் பகுதிகள் இக்கதையில் அதிகமுண்டு. உயிர் ஆதாரத்தின் உயிரை எழுப்ப ஊர்மக்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் வேடிக்கையோடு இக்கதையில் எழுதப்பட்டிருக்கிறது. இக்கதையில் நாட்டுப்புற கதை மரபின் அம்சம் முழுமையாகப் பொருந்தி வெளிப்பட்டிருக்கிறது.
சிறுவனின் பாலியல் வேட்கையைச் சொல்லும் நோக்கில் தற்காலத்தில் தீவிரமாக கையாள முனையும் மாறுபட்ட பாலியல் உறவு முறைகள் மற்றும் அவற்றால் எழும் உடலியல் விளைவுகளும் மறைமுகமாக உணர்த்தப்படுகின்றன. மொழியாலும் உடலாலும் மட்டுமே ஒருவனது பாலியல் இச்சையைத் தூண்டிவிட முடியாது. ஒவ்வொருவருக்கும் இருக்கும் தனிப்பட்ட பாலியல் ஈடுபாட்டைத் தூண்டும் பழக்கங்கள் பலபடித்தானதாக இருப்பதை மண்யோனி எனும் ஒரு எடுத்துக்காட்டினை முன்வைத்து கதையாக்கியுள்ளார் குமார் அம்பாயிரம்.
“வழக்கு எண் 235/2020” என்ற கதை ஒரு கொலை வழக்கு சம்பந்தப்பட்ட கதை. ஆரம்பத்தில் பிணம் காற்றில் மிதக்கும் மாய பாணியை உடையதாக அமைந்திருக்கும் இக்கதையில் அடுத்தடுத்த இடங்கள் அசதா மொழிபெயர்த்துள்ள காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் எழுதிய “முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம்” நாவலை ஒத்த கொலை குறித்த பேச்சுகளாக இருக்கின்றன. மதுக்கடையில் இருப்பவர்களது சாட்சி நீதியரசர், வழக்கறிஞர்கள் இடையிலான உரையாடல், அம்மாவின் அழுகை மிதக்கும் பிணம், வழக்கைத் தீர்த்து வைக்க முடியாமல் ஒத்திவைத்தல் என இருக்கும் கதை நிகழ்வுகளில் பறக்கும் பிணத்தை மட்டும் மறைத்து விட்டு வாசித்தால் நீதிமன்றங்களில் நடக்கும் வழக்குகள் பற்றிய நிகழ்வுகளாக கதை இருக்கக் காணலாம். இக்கதையில் காட்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக அதிகம் அடுக்கிச் சொல்லப்படும் நிலை பயன்படுத்தப்பட்டுள்ளது.
“நாய் டாக்டர்” கதை விலங்குகள் பற்றிய அமைப்புகள் பற்றிய சித்திரத்தைப் பகடியுடன் முன்வைக்கிறது. இக்கதையின் மற்றுமொரு வெளி பீ பேளுபவர்களும் பீ அள்ளுபவர்களும் ஆவர். அவர்களுக்கிடையிலான சமூக முரண் பேசுபொருளாகியிருப்பினும் நாயும் நாய்க்கு அமைப்பாகத் திரண்டு செய்யப்படும் காமச்சேவையும் தான் கதையின் பகடிக்குரிய மையப்பொருள் ஆகும். அமலன் ஸ்டேன்லி எழுதிய “அத்துமீறல்” என்ற நாவல் பரிசோதனை கூட எலிகளைப் பற்றிய நூல் ஆகும். இக்கதையும் வளவளவென்று செல்லாமல் எளிமையாக பல்வேறு செய்திகளுடன் எழுதப்பட்டிருக்குமாயின் இன்னும் நன்றாக இருந்திருக்கும். நாயைப் பார்த்து புணர்ச்சியைக் கற்றுக் கொள்தல் முதலானவை இக்கதையில் தொட்டுக் காட்டப்படுகிறது. Dog&God அமைப்பின் செயல்பாடு தான் இக்கதையாக அமைந்துள்ளது எனலாம். நாய்கள் பற்றிய கதைகள் உலகளவில் எழுதப்பட்டுள்ளன. தற்போதைய சட்டமன்ற கூட்டத்தொடரிலும் கூட தெருநாய்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. அந்த வகையில் இக்கதை நாய்கள் பற்றிய மாறுபட்ட பகுதியொன்றை கதைக்களமாகக் கொண்டிருக்கிறது. இதில் நாய் டாக்டர் சொல்லும் கருத்துகள் மற்றும் அவரது செயல்பாடுகளோடு ஊரில் பாலத்தினடியில் நடக்கும் அத்தனை சேட்டைகளும் கதையின் தொடக்கத்தில் கூறப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்தமாக குமார் அம்பாயிரம் கதைகளைப் பாரத்தால் அதில் இயற்கையை முன்னிலைப்படுத்தும் போக்காக விலங்குகள், பறவைகள், மலர்கள் ஆகியன திரும்பத் திரும்ப இடம்பெறுகின்றன. மாயாவாதம் மூலம் திசைதிருப்பும் போக்கினை இக்கதைகள் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு கதைக்குள்ளும் விமர்சனப் பார்வையும் ஆதரவு மற்றும் எதிர்நிலையும் உள்ளிருக்க காணமுடிகிறது. குறியீடுகள், படிம ஆக்கம் ஆகியவற்றோடு தொன்மம் மற்றும் தொல்குடிப் பழக்கம் மீதான நம்பிக்கையும் நவீன வாழ்வின் சிக்கல்களும் நவீன கதைகூறல் முறை மூலம் முன்வைக்கப்பட்டுள்ளது. நாட்டார் மரபின் கூறுகளும் இக்கதைகளுக்கு வலுசேர்த்துள்ளன. தொன்மம், வரலாற்றுப் புனைவாக்கத்தினூடான மாய யதார்த்தம், நாட்டார் மற்றும் மானிடவியல் வழக்காறு, கலாச்சார நம்பிக்கைகள், கார்ப்பரேட் எதிர்ப்பு, மரபின் மீதான அக்கறை என அனைத்து உட்பொருள்களும் நவீன கதைசொல்லல் முறை மூலம் குமார் அம்பாயிரம் மூலம் கதைகளாக்கப்பட்டுள்ளன.
நூலின் அட்டைப்படம் குறித்து ஏற்கனவே கூறியிருந்தேன். நூலின் அட்டை மற்றும் காகிதம் என புற வடிவம் நன்றாக இருக்கிறது. ஆனால் சொல் இடைவெளி வரி இடைவெளி ஆகியவற்றில் சில மேம்பாடுகளை செய்ய வேண்டும். பொதுவாக புத்தகங்களின் கீழே அல்லது மேலே புத்தகத்தின் பெயர் ஒருபுறமும் எழுத்தாளரின் பெயர் மறுபுறமும் இருக்கும். அந்த இடத்தை அடுத்த பதிப்பில் சரி செய்ய வேண்டியுள்ளது. புத்தகத்தின் அளவு ஒருவேளை இச்சிக்கல்களுக்கு காரணமாக இருக்கலாம்.
(சீர் வாசகர் வட்டம் இந்நூலை சில நாட்களுக்கு முன் சலுகை விலையில் வழங்கியது குறிப்பிடத்தக்கது.)
கருத்துகள்
கருத்துரையிடுக