பரிசளிக்கப்பட்ட இரு நூல்கள் -அழகுராஜ் ராமமூர்த்தி
பரிசளிக்கப்பட்ட இரு நூல்கள் -அழகுராஜ் ராமமூர்த்தி
நெஞ்சைத் தொட்டதும் சுட்டதும் -வெ. இறையன்பு
வெ.இறையன்பு எழுதியுள்ள “நெஞ்சைத் தொட்டதும் சுட்டதும்” என்கிற நூலை 24/04/ 2022 அன்று காமாட்சி காயத்ரி அக்கா பரிசளித்தார். இந்நூலில் சுய அனுபவங்களை பல்வேறு வடிவில் கட்டுரைகளாக அமைத்திருக்கிறார் இறையன்பு. 24 கட்டுரைகள் இருக்கக்கூடிய இந்த நூலில் “கம்பரும் இட ஒதுக்கீடும்” என்கிற கட்டுரையில் மட்டும் இலக்கியச் செய்திகள் இருக்கின்றன. உலகம் முழுவதும் காணப்படும் 48 ராமாயணங்களின் பெயர் பட்டியலும் இடம்பெற்று இருக்கிறது. சில கட்டுரைகளில் பெர்னாட்ஷா, ஷேக்ஸ்பியர், திருவள்ளுவர், கம்பரோடு மேலும் சில அறிஞர்களையும் குறிப்பிட்டுள்ளார். இந்நூலில் இறையன்புவின் பார்வைக்குள் வந்த வேலை பார்க்கும் இடங்களில் தன்னை அர்ப்பணித்து மனப்பூர்வமாக பணியாற்றியவர்கள் பெருமையுடன் நினைவுகூரப்பட்டுள்ளனர். இதில் கவனிக்கத்தக் இரண்டு சம்பவங்கள் நைனேஷ் தவே என்கிற அரசு அதிகாரியும் அகிலா என்கிற பள்ளி ஆசிரியரும் ஆவர். இந்த இரண்டு சம்பவங்களையும சொல்லும் பாணியில் உணர்வைக் கடத்த இறையன்பு முயற்சி செய்துள்ளார். சம்பவத்தில் உணர்வைக் கடத்தும் வகையிலான எழுத்தும் அவரிடமிருந்து வெளிப்பட்டுள்ளது.
தன்னுடைய சுய அனுபவம் மற்றும் தன் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள், தாய் மற்றும் தந்தையர், நண்பர்கள் போன்ற பதிவுகளும் அங்காங்கே வருகின்றன ஆட்சிப் பணியில் இருந்த காலகட்டத்தில் எழுதப்பட்ட கட்டுரைகள் என்பதால் நாட்டின் நலன் மீதும் வேலை வாய்ப்பு, முன்னேற்றம் முதலியன மீதும் அதிக அக்கறையுடன் எழுதியுள்ளார். இது சில இடங்களில் அறிவுரை பாணியாக மாறியிருப்பதால் வாசிக்கும் போது சலிப்பு ஏற்படுகிறது. இருப்பினும் கூட இந்நூலை முழுமையாக வாசிக்கும் ஆர்வம் குறையவில்லை. ஒவ்வொரு கட்டுரையையும் ஆரம்பிக்கும்போது எழுதப்பட்டுள்ள அலங்கார சொற்கள் ஒவ்வாமை தந்தாலும் சில கட்டுரைகளுக்குள் நல்ல தகவல்கள் அடங்கியிருப்பதோடு சில நூல்களையும் மையமிட்டு அதன் வழியிலான ஆக்கப்பூர்வ பார்வையை வெளிப்படுத்தியிருப்பதால் அவற்றை வாசிப்பதற்காகவே இந்நூலை கவனத்துடன் வாசித்தேன்.
சிந்தனை நவீனமாக இருக்க வேண்டும் என்று ஓரிடத்தில் சொல்வதும் மற்றொரு பகுதியில் தேசபக்தியை மையமிட்டு பழைமை பாராட்ட முனைவதுமாக உள் முரண் உள்ள பகுதிகளும் கட்டுரைகளுக்குள் இருக்கிறது. அதேபோல குறிக்கோள்களுடைய வாழ்க்கையே சிறந்த வாழ்க்கை என்று சொல்பவர் மற்றொரு இடத்தில் இலக்கினை நிர்ணயம் செய்து அதை நோக்கி திட்டமிட்டு செயல்பட வேண்டும் என்கிறார். இப்படியான பகுதிகளை பார்க்கும்போது கம்பர் பற்றிய கட்டுரையில் அவர் சொன்ன ஒழுங்கமைதியும் செம்மையும் இந்நூலில் தவறி இருப்பதாகவே தெரிகிறது. ஒருவேளை புனைவுக்கு மட்டும் ஒழுங்கமைதி மற்றும் செம்மை குறித்து கூறினார் போலும். அதேசமயம், தன்னுடைய அம்மாவை மையமிட்டும் பெண்களைப் பற்றியும் எழுதியுள்ள கட்டுரைகளில் நல்ல அவதானிப்பு வெளிப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இயற்கை பற்றிய வர்ணனைகள் சில இடங்களில் செயற்கையாக தோன்றினாலும் கூட அறிமுகப்படுத்தும் ஏலகிரி போன்ற மலைகளையும் முதுமலை சரணாலயம் போன்ற பிற இடங்களையும் அதனுடைய சிறப்புகளோடு வெளிப்படுத்த நினைத்திருக்கக்கூடிய எண்ணம் முக்கியமானதாகப்படுகிறது. காட்டுப் புலி, யானைப்பால், முதலை, ப்ளாவர் போன்ற உயிரினங்கள் குறித்த செய்திகளும் கலைகள் மீதுள்ள அக்கறையுணர்வும் இந்நூலுக்கு வலு சேர்க்கும் அம்சங்களாகின்றன.
‘அடி’க் குறிப்புகள் என்ற கட்டுரையில் சில இடங்களில் அவர் செய்யும் பகடிகள் வேலை செய்தாலும் கூட சில இடங்களில் வலிந்து வெளிப்பட்டு அயர்ச்சியை வரவழைக்கிறது. இதனை வேறு சில கட்டுரைகளிலும் ஆங்காங்கே பார்க்கலாம். தாக்கம் மற்றும் பாதிப்புக்கு இடையிலான வேறுபாடு தெளிவுபடுத்தப்படும் இடம் ஒப்பிலக்கியம் சார்ந்த முக்கியமான கற்பிதம் ஆகும். ஒப்பிலக்கிய ஆய்வினை நிகழ்த்துவோர் பலர் குழப்பிக் கொள்ளும் வகையில் பயன்படுத்தும் இரண்டு சொற்களை லாவகமாக இறையன்பு பயன்படுத்தி விளக்கியுள்ளார். மேலும் பழங்குடிகள் பற்றிய செய்திகள், இட ஒதுக்கீட்டின் காரண காரியங்கள், அம்ரித்தா தேவியின் போராட்டம் உள்ளிட்ட செய்திகளை கட்டுரைகளுக்கு இடையில் குறிப்பிட்ட பாங்கு நன்றாக கூடி வந்துள்ளது. இப்படியான கருத்துக்களுக்கு இடம் கொடுப்பதற்கு கட்டுரையின் பொருண்மைகள் சுற்றுலாவை மையப்படுத்தியதாக இருந்தது முக்கிய காரணம் எனக் கருதலாம். இயற்கை, கலைகளின் மேன்மை, வேலைவாய்ப்பு, பொழுதுபோக்கு என்று பலவித உட்கூறுகளை உள்ளடக்கி சுற்றுலா பற்றிய கட்டுரைகள் அமைந்துள்ளன. அதிகப்படியான விவரிப்பு சில இடங்களில் இருக்கிறது. இது கட்டுரையின் உண்மைத்தன்மைக்கு எதிர்புறமான எழுத்தாக இருப்பதாகவே தெரிகிறது. அதை மட்டும் குறைத்திருக்கலாம். பேச்சில் வெளிப்படும் அதிக வர்ணனைப் போக்கு எழுத்தில் வரும் போது ஒத்துப் போகாமல் ஆகிறது என்பதற்கு இத்தகைய பகுதிகள் சான்று.
ஆட்டோக்காரர்கள் குறித்து பல்வேறு கட்டுரைகள் தமிழில் கவனம் பெறத் தக்கவையாக வந்திருக்கின்றன. எஸ். ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா போன்றோர் எழுதியுள்ள கட்டுரைகள் அதில் குறிப்பிடத்தகுந்தவை. இறையன்புவும் தன்னுடைய அனுபவத்தையும் கருத்தையும் பதிவு செய்துள்ளார். விடுதலைத் திருநாள், அறுவடைத் திருநாள் பற்றிய கட்டுரைகளின் பழைமைவாதம் படிந்திருப்பது போல் பட்டாலும் உள்ளிருக்கும் கருத்தில் முக்கியமானது. உணர்ச்சி கொண்டாட்டங்களுக்கு முக்கியம். அத்தகைய உணர்ச்சியை எல்லாரிடமும் ஒரே தன்மையில் வெளிப்படுமாறு கொண்டு சேர்க்க இயலாது. வீர ஆவேசமான ஒரு மணி நேர இரண்டு மணி நேரப் பேச்சில் கொண்டு போய் சேர்த்தாலும் காலத்தின் ஓட்டத்தில் அக்கருத்துகள் சிறுவர் மத்தியில் கரைந்து போய்விடும் அல்லது தேங்கிவிடும். ஆதலால் தொடர்ச்சியாக செயல்பாடுகள் வழியே வரலாற்றையும் பண்பாட்டையும் கொண்டு சேர்க்கும் வழிமுறைகளை முன்னெடுப்பது தான் ஓரளவு நல்ல தீர்வாகும். அது பற்றிய சுட்டுதல் இல்லாமை தான் இந்த கட்டுரைகளில் ஓம் நான் கட்டுரைகளின் முடிவிலும் நான் பார்க்கக்கூடிய பலவீனமான அம்சம்.
சமீபத்தில் தோழர் வேலாயுதம் பொன்னுசாமி மற்றும் எஸ்.ரவிச்சந்திரன் சார் ஆகியோரோடு பேசிக்கொண்டிருந்த போது நடமாடும் புத்தகக் கடை பற்றிய செய்திகளையும் அறிவொளி கால செயல்பாடுகளையும் குறித்து சொன்னார்கள். இன்று நடக்கும் புத்தகக் காட்சிகளை பற்றிய பேச்சு வருகையில் நடமாடும் வாகனங்களில் புத்தகங்களை அடுக்கி அதனுள் காட்சிக்கு வைத்திருந்த விதமும் அங்கு போய் புத்தகம் வாங்கி வரும் நடைமுறை இருந்ததையும் அதற்கேற்ற வடிவமைப்பில் வாகனங்கள் அமைக்கப்பட்டிருந்ததையும் கூறினார்கள். அதைத் தொடர்ந்து மிதிவண்டியில் சென்று வகுப்பிற்கும் அறிவொளி கால செயல்பாடுகளையும் நினைவுகளில் இருந்து பகிர்ந்து கொண்டார்கள். இறையன்பு ஒரு கட்டுரையில் நிலவொளி பள்ளிகள் என்கிற அமைப்பு முறை மற்றும் அதன் செயல்பாட்டு அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார். இப்படியான பேச்சுக்களும் பதிவுகளும் கல்வி வரலாற்று நிலையில் முக்கியத்துவம் உடையன ஆகின்றன.
கம்பரும் உடலசைவு மொழிகளும், கம்பரும் இட ஒதுக்கீடும் ஆகிய இரண்டு கட்டுரைகளும் இத்தொகுப்பின் முக்கியமான கட்டுரைகள். இயற்கை மொழியியல் பற்றிய ஆர்வத்தை ஏற்படுத்தும் உட்பொருள் கொண்டதாக கம்பரும் உடலசைவும் மொழிகளும் கட்டுரையும் அரசியல் பற்றிய கம்பராமாயண காட்சிகளுடனான தொடர்பை மையம் கொண்டு இட ஒதுக்கீட்டின் சாராம்சத்தையும் அதற்கான அடிப்படை அம்சங்களையும் விளக்கும் கம்பரும் இட ஒதுக்கீடும் கட்டுரையும் அமைந்திருக்கிறது. அறிவியல் செய்திகளில் இருந்து ஆங்காங்கே தாவித் தாவி பல்வேறு துறைகள் பற்றிய சிறிய சிறிய செய்திகளை இந்நூலின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். மொழிநடை தான் ஒவ்வொரு கட்டுரையிலும் வேறுபட்டு இருக்கிறது. இந்நூலில் ஒட்டுறவற்ற தன்மை இருப்பது தொகுப்பாக வாசிக்கும் போது தென்படுகிறது.
தோன்றாத் துணை -பெருமாள் முருகன்
பெருமாள் முருகன் தனது அம்மாவைக் குறித்து எழுதியுள்ள 22 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு தோன்றாத் துணை. இந்நூலை 06.11.2022அன்று காமாட்சி காயத்ரி அக்கா பரிசளித்தார். அம்மாவின் குணம் செயல்பாடு போன்றவற்றை கூறுவதன் வாயிலாக அந்தக் காலகட்டத்தின் வாழ்வியல் அம்சங்களை பெருமாள் முருகன் இந்நூலில் புலப்படுத்தியுள்ளார். அதிலும் ஒரு குறிப்பிட்ட ஊரிலுள்ள தனிமனிதர் ஒருவரின் பார்வையில் ஊரின் நடவடிக்கைகள் பேசு பொருளாகி இருக்கின்றன. அப்புச்சி, அப்பா ஆகிய இருவரும் அம்மாவுக்கு அடுத்த நிலையில் இக்கட்டுரையில் பேசப்படுபவர்கள் ஆகின்றனர். ஒவ்வொரு இயக்கங்களும் தனது கொள்கைகளைக் கொண்டு போய் சேர்ப்பதற்கு ஏதுவான வகையில் ஒரு உலகத்தை கட்டமைப்பு செய்து இதுதான் உலகம் எனச் சொல்வது இயல்பு. ஆனால் எல்லா இயக்கத்தவரும் தனக்கு தேவையானதை மட்டும் பெரிதாக வைத்து அதைச் சுற்றி கிராமங்கள் மற்றும் நகரங்களின் தன்மையைக் கட்டமைப்பு செய்கின்றனர். இவை அனைத்தையும் ஒருங்கே கூட்டி வைத்து ஒரு முடிவுக்கு வருவதே ஓரளவுக்கு உண்மைக்கு நெருக்கமானதாக இருக்கும்.
பெருமாள் முருகனின் இந்நூலில் பதிவாகியுள்ள குடும்பமும் அதன் பழக்க வழக்கங்களும் ஒருங்கே கூட்டி வைத்தலுக்குள் சில முக்கியமான தரவுகளை கொடுப்பனவாக அமைகின்றன. ஆண் பெண் குடும்ப உறவு, தூங்குவதற்குரிய கயிற்றுக்கட்டில்ஃ செக்குக்குப் போய் எண்ணெய் ஆட்டி வருதல், மருத்துவம், விளையாட்டுகள், கள் உணவாக இருந்த தன்மை, ஜவுளிக்கடைகள் என பல்வேறு செய்திகளை தனது அம்மாவின் நினைவு வழியாக கொண்டு வந்து தந்திருக்கிறார் பெருமாள் முருகன். காசு என்ன மரத்திலயா காய்க்குது என்பார்கள். ஆமாம் மரத்தில்தான் காய்க்குது என்பதற்கு அம்மா எப்படி உதாரணமாக இருந்தார் என்பதும் இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் அவர்கள் வாழ்வில் பழக்கமாகி போன செயலை செய்ய முடியாத சூழலும் நிலையும் ஏற்படும்போது எழும் மனத் திண்டாட்டம் போன்றவை எல்லாம் இந்நூலில் பதிவாகி இருக்கின்றன.
சாதியம் குறித்த போக்குகள், பெருமாள் முருகனைப் பெண் என்று கேலி செய்த தன்மை, பொறுமையுடன் அப்புச்சிக்காக ஏண்டு பேசிய அப்பா, கற்றுக் கொடுக்கும் ஆசிரியராக காலந்தோறும் விளங்கிய நினைவாற்றல் மிகுந்த அம்மா, பெருமாள் முருகனின் வாசிப்புப் பழக்கம் வளர்ந்த செய்தி, ஒரு மனிதனுக்கானத் தேவை நுகர்வு கலாச்சாரத்திற்கு முன் எப்படியாக இருந்தது, எப்படியாக மாற்றம் பெற்றது என்பதுடன் சொத்துகளை சேர்க்க முடியவில்லை என்றாலும் கூட காக்க முடியாத காலகட்டத்தை நோக்கி நகரும் நடுத்தர வர்க்க குடும்பத்தின் போக்குகள் போன்றவற்றை எல்லாம் இந்நூலினுள் இருக்கக் காணலாம். எடுத்தால் வைக்க முடியாமல் படித்துக் கொண்டே போகக்கூடிய செம்மையான எழுத்து நடை ஒருபுறமும் அம்மா மற்றொரு புறமாக இந்த நூலின் பலமாக அமைந்திருக்கின்றனர். எழிலரசி எழுதியுள்ள அத்தையம்மா என்ற தலைப்பிலான அணிந்துரையும் ஒரு கட்டுரையாக வைத்து பார்க்கத் தகுந்த அளவிலான அம்மா பற்றிய தகவல்கள் கொண்டு விளங்குகிறது. அத்தைப்பாட்டி என்ற சொல்லாடலை அத்தையம்மா என்ற சொல் நினைவுபடுத்தியது. நினைவை எழுத்தாக்குவது என்பது ஒரு வகையில் வடிகாலாகவும் விடுதலையாகவும் இருக்கும் என்பதை நான் தனிப்பட்ட வாழ்வில் உணர்ந்திருக்கிறேன். அப்படி எழுதுவது பிறர்க்கும் ஒரு வகையில் பயனளிக்க வேண்டும் என்பதை இந்நூல் அழுத்தமாக உணர்த்துகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக