வாழ்வே செயல் "ம. இலெ. தங்கப்பா" -அழகுராஜ் ராமமூர்த்தி

 வாழ்வே செயல் "ம. இலெ. தங்கப்பா" -அழகுராஜ் ராமமூர்த்தி 



    2018ஆம் ஆண்டு ம.இலெ. தங்கப்பா, பிரபஞ்சன், க.ப.அறவாணன் ஆகியோர் மறைந்தனர். அதுதான் எனக்கு ம.இலெ.தங்கப்பா குறித்த அறிமுகமாகவும் அமைந்தது.  பேராசிரியர் எஸ்.இரவிச்சந்திரனுடன் தோழர் வேலாயுதம் பொன்னுசாமி, விஜய் ஐயப்பன் அண்ணன் ஆகியோரோடு நானும் பேசிக்கொண்டிருந்த நாளொன்றில் தமிழறிஞர் ம.இலெ.தங்கப்பாவிற்கும் ஆய்வறிஞர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கும் இடையிலான எழுத்துத் தொடர்பு மற்றும் த. கோவேந்தன் குறித்து பேசப்பட்டது. புதுவைப் பல்கலைக்கழகத்தில் நான் முதுகலை படிக்கும் போது வாரம் ஒரு ஆவணப்படத்தைத் திரையிடும் முயற்சியாக தொடங்கிய "WATCH THE DOCUMENTARY PARTICIPATE THE DISCUSSION" நிகழ்ச்சியில் புதுச்சேரி வரலாற்று ஆய்வு அறக்கட்டளை தயாரிப்பில் பி.என்.எஸ் பாண்டியன் இயக்கிய ம.இலெ.தங்கப்பாவின் "வானகத்தின் வாழ்வியக்கம்" ஆவணப்படத்தைத் திரையிடவும் எண்ணம் இருந்தது. காலம் ஒத்துழைக்கவில்லை. தென்தமிழகத்தில் இருந்து பாண்டிச்சேரிக்கு சென்ற தமிழ் ஆளுமைகளென்று பாரதியார், கி.ராஜநாராயணன், க. பஞ்சாங்கம், ராஜ் கௌதமன், ம.இலெ. தங்கப்பா என்று பட்டியலிட முடியும்.


தங்கப்பா சிறார் இலக்கியம், ஆசிரியத்துவம், ஓவியம், மொழிபெயர்ப்பு, இயற்கை, மொழியுணர்வு, இனவுணர்வு, இதழ்கள், இயக்கமென பல தளங்களில் செயல்பட்டவர். இவருடைய ஒவ்வொரு செயல்பாட்டிற்கு பின்னும் அவருக்கிருந்த ஆழமான ஈடுபாடே இயக்கியிருக்கிறதென சொல்லலாம். ஆங்கிலத்தில் ஆழ்ந்த புலமை கொண்டிருந்து ஏராளமான மொழிபெயர்ப்புகளை தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் செய்தவர். தென்மொழி இதழில் சங்க இலக்கியம் தொட்டு பழந்தமிழ் இலக்கியங்களை அதிகம் அவர் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். தனித்தமிழ் இயக்கத்தில் இவர் தொடர் செயல்பாட்டிலிருந்தவர். பெருஞ்சித்திரனாரின் தென்மொழி இதழில் எழுத தொடங்கி புதுச்சேரி அரசு கொடுத்த தமிழ்மாமணி விருதினை திருமுருகனுடன் இணைந்து திருப்பியளித்தது வரை இவருடைய தமிழுணர்வை நாம் விளங்கிக்கொள்ளலாம். தங்கப்பாவையும் அவருடைய கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளையும் உடனிருந்து ஆதரித்தவர் அவர் மனைவி விசாலாட்சி அம்மையார். இதற்கு எடுத்துக்காட்டாக அவர் தன்னுடைய பெயரை தடங்கண்ணி என மாற்றிக்கொண்டதைக் கூறலாம்.



இதழ்களில் தொடர்ச்சியாக ம. இலெ. தங்கப்பா எழுதி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். பாரதிதாசன் நடத்திய குயில், பெருஞ்சித்திரனாரின் தென்மொழி, கோவேந்தனின் வானம்பாடி, இவைமட்டுமன்றி எண்ணற்ற இதழ்களில் எழுதியிருக்கிறார். தென்மொழி இதழ் சார்பில் அவருக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்திருக்கிறது. தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தென்றல், வானம்பாடி, பூஞ்சோலை, இனமுழக்கம், தமிழகம், உரிமை வேட்கை, கைகாட்டி, கவிஞன், மீட்போலை, அரும்பு, விருந்து, கவியுகம், பொதுமை, தெளிதமிழ், வெல்லும் தூயதமிழ், கண்ணியம் ஆகிய இதழ்களில் தங்கப்பாவின் ஆக்கங்கள் வெளியானதாக பேராசிரியர் மு. இளங்கோவன் குறிப்பிடுகிறார்.  


ஈழப்போர் காலத்திலும் இவருடைய செயல்பாடுகள் இருந்திருக்கின்றன. தமிழ் வளர்ச்சி நடவடிக்கைக் குழு என்ற அமைப்பின் மூலம் தொடர்ந்து தமிழ் முன்னுரிமை பெற வேண்டுமென குரல் கொடுத்தவர் ம. இலெ. தங்கப்பா. இவருடைய இயற்கை சார்ந்த ஆர்வமும் பணிகளும் அவருடைய ஆக்கங்கள் மற்றும் செயல்பாடுகள் வழி தெரிகின்றன‌. இயற்கை விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்துதல், மரம் நடுதல் போன்ற செயல்பாடுகளுடன் தனது சிறார் பாடல்களில் இயற்கையை முதன்மைப்படுத்தும் விதமாக மரங்கள், பறவைகள், விலங்குகளை அதிகம் பாடியிருக்கிறார். எழுத்துப் பணி என்பதோடு நில்லாமல் களத்தில் நிற்பவராகவும் தான் எழுதியதையும் தனது பொதுச் செயல்பாட்டையும் குடும்பத்திலும் நிகழ்த்திக் காட்டியுள்ளார் தங்கப்பா. கிறித்துவ பின்னணியில் பிறந்த தங்கப்பா சாதி சமய அடையாளமின்றி வாழ்ந்தவர். சாதி மறுப்பு திருமணம் செய்தவர். திருமணம் செய்த காலத்தில் ஏன் சொந்த ஊரிலிருந்து வெளியேறி அவர் சென்னை மற்றும் பாண்டிச்சேரி போன்ற நகரங்களில் இருந்தார் என்பதற்கு பின் அவரது ஊரிலிருந்த சாதிய உணர்வின் இடம் வெளிப்படுகிறது. 


தங்கப்பாவின் தந்தை பெரியாரிய உணர்வாளர், தமிழாசிரியர். அவரிடமிருந்து அதைப் பெற்றுக்கொண்ட தங்கப்பா தனது வாழ்க்கையின் அடையாளமாக அதனை பரிணமிக்க செய்திருக்கிறார். சிறு வயதிலேயே இருந்த இவருடைய தமிழ் ஈடுபாடும் அவரது தந்தையின் வழிகாட்டுதலும் இந்த இடத்தில் முக்கியத்துவமுடையதாகின்றன‌. கம்பராமாயணம், வில்லிபாரதம் சொல்லிக் கொடுத்த அவரது தந்தை கிறித்துவ பின்னணி உடையவர், பெரியாரிய உணர்வாளர். ஏராளமான மொழிபெயர்ப்புகள் செய்த, இந்தி ஆசிரியரை மணம் முடித்த ம.இலெ. தங்கப்பா தனித்தமிழ் உணர்வாளரென்ற இவ்விரு செய்திகளின் வழி அறிவுப்பூர்வமாக ஒவ்வொன்றையும் எப்படி அணுக வேண்டுமென்ற புரிதலை தருகிறது.


சிறார் இலக்கியம் என்ற‌ வகையில் ஒரு‌ ஆசிரியராக இவர் மாணவர்களுக்கு பாடம் நடத்திய‌ முறை முதலியனவும் அதனோடு இணைத்துப் பார்க்கத்தக்கனவாகும். ஆசிரியராக இருந்த தன்னுடைய தங்கைக்காக, த. கோவேந்தனுக்காக என்று சிறார் பாடல்களை எழுதத் தொடங்கிய தங்கப்பா 2010ல் "சோளக் கொல்லைப் பொம்மை" நூலுக்காக குழந்தை இலக்கியத்திற்கான சாகித்திய அகாதமி விருது பெற்றார். பாட்டின் வழியிலான கல்வி என்பதில் தங்கப்பாவின் கருத்து அழுத்தம் திருத்தமாக இருந்துள்ளது. அதற்கு அவருடைய இலக்கியச் செயல்பாட்டை தகுந்த எடுத்துக்காட்டாக கொள்ளலாம். தங்கப்பாவின் மொழிபெயர்ப்பு நுண்மை குறித்தும் "Love Stands Alone" நூல் குறித்தும் பேராசிரியர்கள் சிலர் விதந்து குறிப்பிட்டு பேச கேட்டிருக்கிறேன். அந்நூலுக்காக 2012ஆம் ஆண்டு மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருதினை தங்கப்பா பெற்றுள்ளார். மொழி மானம், உரிமைக்குரல், பனிப்பாறை நுனிகள், பின்னிலிருந்து ஒரு குரல், அடிச்சுவட்டில், அகமும் புறமும் ஆற்றுப்படையும், எது வாழ்க்கை, பாட்டு வாழ்க்கை,  சங்க இலக்கியம் மற்றும் முத்தொள்ளாயிரம் மொழிபெயர்ப்புகள் முதலியன அவருடைய நூல்களில் சிலவாகும். இவருடைய நூல்கள் சொந்த பதிப்பகம் மூலமாகவே வெளிவந்ததாக தெரிகிறது. வானகம் என்பது தான் வீட்டின்‌ பெயர். வானகம் என்ற சொல் ஆவணப்படத்தின் பெயரிலும் உண்டு. வானகம் என்ற சொல் தங்கப்பாவைக் கவர்ந்ததற்கான காரணம் எங்கேனும் பதிவாகியுள்ளதா எனத் தெரியவில்லை.


      வானகப் பதிப்பகம் மூலம் யாழ் அரங்கம் மற்றும் ஆய்வு நிறுவனத்தில் இவ்விணையர்களின் நினைவாக நிகழ்த்தப்பெறும் மக்களிசை நிகழ்வில் சங்கீத கலாநிதி டி.எம்.கிருஷ்ணா கலந்துகொண்டிருப்பது மிகப் பொருத்தமானது. அவரும் சாதிய ஏற்றத்தாழ்வை இசையின் வழி எதிர்த்து செயல்பட்டுக் கொண்டிருப்பவர். தங்கப்பாவின் பாடல் வழி கற்றல் என்ற செயல்முறையுடனும் டி.எம்.கிருஷ்ணாவின் செயல்பாடுகளை இணைத்துப் பார்க்கலாம். தொடர்ந்து பெருமாள் முருகன் எழுதும் தமிழ்ப்பாடல்களை கர்நாடக சங்கீதத்தில் கிருஷ்ணா பாடி வருகிறார். பாண்டிச்சேரியில் இருந்திருந்தால் இந்நிகழ்வில் கட்டாயம் கலந்து கொண்டிருப்பேன்.





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கி.ராஜநாராயணன் பற்றி -ரா.அழகுராஜ்

தனியறையில் நிகழும் சாவு -அழகுராஜ் ராமமூர்த்தி

சூழல் அறம்- சுப்ரபாரதிமணியன்